வங்கதேச போட்டி
இதுவரை 3 போட்டிகளில் விளையாடியுள்ள ரோகித் சர்மாவின் படை 2 வெற்றிகள் மற்றும் ஒரு தோல்வியுடன் 4 புள்ளிகளை பெற்றுள்ளது. வங்கதேச அணியும் அதே 4 புள்ளிகளுடன் தான் உள்ளது. எனினும் ரன்ரேட் அடிப்படையில் புள்ளிப்பட்டியலில் இந்தியாவுக்கு பின் வங்கதேசம் இருக்கிறது. எனவே இன்று வெற்றி பெறுவது இரு அணிகளுக்குமே முக்கியமான ஒன்றாகும்.
சகிப்பின் பேச்சு
இந்த சூழலில் தான் வங்கதேச கேப்டன் சகிப் அல் ஹசன் கூறிய வார்த்தைகள் பேசுப்பொருளாகியுள்ளது. உலகக்கோப்பையை வெல்வதற்கு அதிக வாய்ப்பு உள்ள அணியாக இந்தியா உள்ளது. ஆனால் எங்களுக்கு வாய்ப்பு குறைவு என கூறப்படுகிறது. நாங்கள் இங்கு உலக கோப்பையை வெல்ல வரவில்லை. இந்தியா போன்ற பெரிய அணியை வீழ்த்தி தாக்கம் ஏற்படுத்த வந்தோம்.
வியூகங்கள் தயார்
உலகக்கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ள இந்திய அணியை நாங்கள் வீழ்த்தினால் அது பெரிய அதிர்ச்சி சம்பவமாக மாறும். எனவே எங்களுக்கு அது போதும். இந்திய அணியை வீழ்த்துவதற்கான வியூகங்கள் மற்றும் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் என சகிப் அல் ஹசன் கூறினார்.
டிராவிட் பதில்
இதற்கு இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பதில் அளித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், வங்கதேச அணியை நாங்கள் பெரிதும் மதிக்கின்றோம். உலகக்கோப்பையில் டி20 வடிவ கிரிக்கெட்டில் நம்மால் எதையுமே கணிக்க முடியாது. ஏனென்றால் ஒவ்வொரு ஆட்டத்தின் முடிவும் 12 - 15 ரன்கள் வித்தியாசத்தில் தான் இருக்கும். கடைசி 2 பெரிய ஷாட்களை ஆடப்போவது யார் என்பது தான் இங்கு போட்டி.
உதாரணம் இதோ
உண்மையை சொல்லப்போனால் பலமான இங்கிலாந்து அணியை அயர்லாந்து வீழ்த்தியிருந்தது. டி20-ஐ பொறுத்தவரையில் யாரையும் குறைத்து மதிப்பிட முடியாது. யார் வேண்டுமானாலும் கோப்பையை வெல்லலாம், இவர் தான், அவர் தான் என கூறுவது தவறாக தான் போகும் என டிராவிட் பதில் கூறியுள்ளார்.