விலகும் கில்
இந்த தொடர் தொடங்க இன்னும் 5 வார காலம் இருக்கும் நிலையில் இந்திய அணியின் ஓப்பனிங் வீரர் சுப்மன் கில் காயம் காரணமாக விலகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரின் காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அது சரியாக 2 மாதங்கள் ஆகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. எனினும் அவருக்கு எப்போது காயம் ஏற்பட்டது, என்ன காயம் என்பதுகுறித்து எந்த தகவலும் வெளிவரவில்லை.
3 வீரர்கள் போட்டி
ஆஸ்திரேலிய தொடரில் சுப்மன் கில் சிறப்பாக செயல்பட்ட பின்னர் இந்திய அணியின் ஓப்பனிங்கிற்கு முதல் தேர்வாக திகழ்கிறார். ஆனால் தற்போது அவருக்கு பதிலாக 3 வீரர்களை களமிறக்க இந்திய அணி நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது. இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணியில் தற்போது டாப் ஆர்டரில் விளையாடுவதற்கு இன்னும் கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால், ஹனுமா விஹாரி ஆகியோர் உள்ளனர்.
ஓப்பனிங்கிற்கு யார்?
இதில் மயங்க் அகர்வால், அயல்நாட்டு களங்களில் சிறப்பாக செயல்படுவார் என்பதால் அவரை ஓப்பனிங் களமிறக்க திட்டம் போடப்பட்டுள்ளது. ஒருவேளை அவரும் சிறப்பாக ஆடவில்லை என்றால் இங்கிலாந்து களத்தில் நல்ல அனுபவம் வாய்ந்த ஹனுமா விஹாரிக்கு ஓப்பனிங் களமிறங்க வாய்ப்புகள் அளிக்கப்படவுள்ளது. ஹனுமா விஹாரி புதுப்பந்தில் நன்கு ஆடுபவர் என்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ராகுலின் நிலைமை
கே.எல்.ராகுல் கடந்த 2 ஆண்டுகளாக சரிவர ஆடாத காரணத்தால் அவரை ஓப்பனராக களமிறக்க பிசிசிஐ சிந்திக்கவில்லை. எனினும் அவரை மிடில் ஆர்டரில் 4 விக்கெட்டிற்கு களமிறக்க அணி நிர்வாகம் யோசித்து வருகிறது. மிடில் ஆர்டரில் சில காலம் நன்றாக விளையாடிய பின்னர் அவரை ஓப்பனிங்கிற்கு மீண்டும் கொண்டு வரவுள்ளது.