உமேஷ் கொடுத்த தலைவலி
ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணியில் 10 விக்கெட் எடுத்த உமேஷ் யாதவுக்கும் இடம் அளிக்க வேண்டிய சூழல் தற்போதுஉருவாகி உள்ளது. ஏற்கனவே, இந்திய டெஸ்ட் அணியில் மூன்று முக்கிய வேகப்பந்துவீச்சாளர்கள் இருக்கும் நிலையில் உமேஷ் யாதவுக்கான இடத்தை எப்படி அளிப்பது என்ற தலைவலியை உருவாக்கி உள்ளது.
மூன்று வேகப்பந்துவீச்சாளர்கள்
இந்திய டெஸ்ட் அணியில் முக்கிய வேகப்பந்துவீச்சாளர்களாக பும்ரா, புவனேஸ்வர் குமார் மற்றும் இஷாந்த் சர்மா இருக்கின்றனர். இவர்களில் இஷாந்த் சர்மா தற்போது காயத்தில் இருந்து குணமடைந்து வருகிறார். அவர் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கு முன் குணமடைந்து விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பும்ரா, புவனேஸ்வர் குமார் தொடர்ந்து சிறப்பாக பந்து வீசி வருகின்றனர். அணியில் நிரந்தர இடம் பிடித்த இரண்டு பந்துவீச்சாளர்கள் இவர்கள் மட்டுமே. முக்கிய தொடர்களில் மட்டும் இவர்களை பயன்படுத்த அணி நிர்வாகம் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. அதன்படி ஆஸ்திரேலியா தொடரில் இவர்கள் இருவரும் நிச்சயம் இடம் பெறுவார்கள்.
ஷமிக்கு வாய்ப்பு இல்லை
முகமது ஷமி தனக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பில், முதல் டெஸ்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. உமேஷ் யாதவ் முதல் டெஸ்டில் சரியாக செயல்படாத நிலையிலும், இரண்டாம் டெஸ்டில் கிடைத்த வாய்ப்பில் முதல் இன்னிங்க்ஸில் 6 விக்கெட்களும், இரண்டாம் இன்னிங்க்ஸில் 4 விக்கெட்களும் வீழ்த்தி அசத்தினார். இதனால், இங்கிலாந்து தொடரில் முழுமையாக வாய்ப்பு பெற்ற ஷமி, தன் வாய்ப்புகளில் பெரிதாக விக்கெட்கள் வீழ்த்தவில்லை.
இஷாந்த் வந்தால் இடம் யாருக்கு?
கேப்டன் விராட் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் உமேஷ் யாதவுக்கு ஆஸ்திரேலியா தொடரில் இடம் உண்டு என கூறி உள்ளனர். புவனேஸ்வர் குமார், பும்ரா இருவரும் நிச்சயம் அணியில் இடம் பிடித்து விடுவார்கள். இஷாந்த் சர்மா மீண்டும் அணிக்குள் வரும் பட்சத்தில் மூன்றாவது பந்துவீச்சாளர் இடத்தை யார் நிரப்புவார்கள் என்ற கேள்வி எழும்.
உமேஷ்-க்கு வாய்ப்பு அளிக்கலாமா?
மேலும், இஷாந்த் இங்கிலாந்தில் அனைத்து போட்டிகளிலும் ஒரே அளவில் பந்துவீசினார். அதிக விக்கெட்கள் வீழ்த்தாவிட்டாலும், அனைத்து போட்டிகளிலும் எதிரணியை அச்சுறுத்தும் வகையில் பந்து வீசினார். இந்நிலையில், இஷாந்த் சர்மா மீண்டும் அணிக்குள் நுழைந்தால் அவருக்கு இடம் அளிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. உமேஷ் யாதவ் கடந்த பல போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மட்டுமே சிறப்பாக செயல்பட்டுள்ளார். அவருக்கு ஆஸ்திரேலியாவில் வாய்ப்பு அளிப்பது சரியாக இருக்குமா என்ற சந்தேகமும் உள்ளது.