தோனி நிலை
தோனி கடந்த 2019 உலகக்கோப்பை தொடரில் இருந்து இந்திய அணியில் பங்கேற்கவில்லை. பிசிசிஐ வீரர்கள் ஒப்பந்தத்தில் இருந்தும் அவர் பெயர் நீக்கப்பட்டது. இனி அவர் இந்திய அணியில் பங்கேற்கவே முடியாது என்ற பேச்சு உள்ளது.
இந்திய அணி வாய்ப்பு
எனினும், 2020 ஐபிஎல் தொடரில் தோனி சிறப்பாக ஆடி தன் பார்மை நிரூபித்தால் அவர் இந்திய அணியில் இடம்பெற வாய்ப்பு இருப்பதாக இந்திய அணி நிர்வாகம் கூறி வந்தது. அதற்கேற்ப தோனி ஐபிஎல் தொடருக்கு தயார் ஆகி வந்தார்.
ஐபிஎல் தொடர் தள்ளி வைப்பு
ஆனால், ஐபிஎல் தொடர் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஏப்ரல் 15 வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதன் பின்னும் ஐபிஎல் தொடர் நடக்குமா? என்பது தெரியவில்லை. ஐபிஎல் தொடர் ரத்து செய்யப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
வேங்கடபதி ராஜு கருத்து
தோனியின் எதிர்காலத்தை கொரோனா பாதித்துள்ளது. இந்த நிலையில், முன்னாள் இந்திய வீரரும், முன்னாள் தேர்வுக் குழு உறுப்பினரும் ஆன வேங்கடபதி ராஜு தோனியை இந்திய அணியில் தேர்வு செய்வதை பற்றி தன் கருத்தை கூறி உள்ளார்.
தோனியை கேப்டன் ஆக்கியவர்
இந்த வேங்கடபதி ராஜு 2007இல் தோனியை கேப்டனாக அறிவித்த தேர்வுக் குழுவில் இடம் பெற்றவர். அப்போது அந்த முடிவு பலராலும் கடுமையாக எதிர்க்கப்பட்டது. அணியில் பல மூத்த வீரர்கள் இருக்கும் போது தோனிக்கு கேப்டன் பதவியை கொடுத்து புரட்சி செய்த தேர்வுக் குழுவில் இருந்தவர்.
தொடர்ந்து ஆட வேண்டும்
அந்த வேங்கடபதி ராஜு தோனி பற்றி கூறுகையில், "எந்த வீரரும் தொடர்ந்து விளையாடி, தன்னை நிரூபித்துக் கொண்டே இருக்க வேண்டும். அது உள்ளூர் போட்டிகளோ, இந்தியா ஏ தொடரோ, அல்லது எந்த வகையான கிரிக்கெட் போட்டிகளாகவும் இருக்கலாம். நீங்கள் மற்றவருக்கு நிரூபிக்கத் தேவையில்லை. உங்களுக்கு நீங்களே நிரூபித்துக் கொள்ள வேண்டும்" என்றார்.
கடினம்
மேலும், "சர்வதேச கிரிக்கெட் ஆடுவது எளிது அல்ல. அது வேறு அளவிலான உடற்தகுதி மற்றும் திறமையை கேட்கும். அதற்காக, நீங்கள் உங்கள் சிறப்பான ஆட்டத்தை அளிக்க வேண்டும். நான் 3 ஆண்டுகள் இடைவெளி கழித்து இந்திய அணிக்கு திரும்பிய போது மிகவும் கடினமாக இருந்தது" என்றார்.
தோனி தேவையில்லை
"அப்போது வேறு வகையான தீவிரமான பயிற்சி இந்திய அணியில் இருந்தது. ரஞ்சி ட்ராபி மற்றும் பிற முதல் தர கிரிக்கெட்டை தாண்டி அது இருந்தது" என தன் அனுபவத்தை சுட்டிக் காட்டினார். இதன் மூலம், தோனியை மீண்டும் இந்திய அணிக்கு தேர்வு செய்யத் தேவையில்லை என கூறி இருக்கிறார் ராஜு.