இன்ஸ்டாகிராம் லைவ் பேட்டி
விராட் கோலி கொரோனா வைரஸ் காரணமாக லாக்டவுனில் இருக்கும் நிலையில் தொடர்ந்து சமூக வலைதளத்தில் பேட்டி அளித்து வருகிறார். பல கிரிக்கெட் வீரர்களுடன் அவர் இன்ஸ்டாகிராமில் பேசினார். இந்த நிலையில், சமீபத்தில் இந்திய கால்பந்து நட்சத்திரம் சுனில் சேத்ரியுடன் லைவில் பேசினார்.
தந்தையின் இழப்பு
அந்த பேட்டியின் இடையே தன் தந்தையின் இழப்பை பற்றி குறிப்பிட்டு வருந்தினார் விராட் கோலி. கோலி 18 வயதாக இருந்த போது அவரின் தந்தை இறந்து விட்டார். தன் தந்தையிடம் தான் கற்றுக் கொண்ட விஷயத்தை சுனில் சேத்ரியிடம் பகிர்ந்து கொண்டார்.
அந்த சம்பவம்
அப்போது தான் டெல்லி அணியில் தன்னை தேர்வு செய்ய லஞ்சம் கேட்டதாக கூறி அதிர வைத்தார். லஞ்சம் கேட்ட அந்த நபர் யார் என விராட் கோலி கூறவில்லை. எனினும், அப்போது தான் தேர்வு செய்யப்படவில்லை எனக் கூறினார்.
லஞ்சம் கேட்டார்
கோலி கூறியதாவது : "என் மாநிலத்தில் (டெல்லி), சில சமயம் நேர்மைக்கு மாறான சில விஷயங்கள் நடக்கும். ஒரு முறை, ஒரு நபர் அணித் தேர்வு செய்வதில் விதிப்படி நடந்து கொள்ளவில்லை. எனக்கு தேர்வாக தகுதி இருந்தும், தன் தந்தையிடம் "கொஞ்சம் எக்ஸ்ட்ரா" வேண்டும் என கேட்டார்."
மறுத்த தந்தை
"என் தந்தை ஒரு மிடில் கிளாஸ் மனிதர். வாழ்க்கை முழுக்க கடுமையாக உழைத்து வெற்றிகரமான வழக்கறிஞராக இருந்தார். அவருக்கு அந்த "கொஞ்சம் எக்ஸ்ட்ரா" என்பது என்ன என்றே புரியவில்லை. என் தந்தை, நீங்கள் விராட் கோலியை அவரது தகுதி அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யுங்கள். நான் உங்களுக்கு எந்த எக்ஸ்ட்ராவும் கொடுக்கவில்லை என கூறி விட்டார்"
கண்ணீர் விட்டு அழுத கோலி
"நான் தேர்வு செய்யப்படவில்லை. கண்ணீர் விட்டு நிறைய அழுதேன். ஆனால், அந்த சம்பவம் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்தது. வெற்றி பெற வேண்டும் என்றால் மிக அசாதாரணமாக செயல்பட வேண்டும் என புரிந்து கொண்டேன்."
தந்தை காட்டிய வழி
"இதை என் கடும் உழைப்பு மற்றும் முயற்சியால் தான் அடைய வேண்டும் என நான் புரிந்து கொண்டேன். என் தந்தை எனக்கு சரியான பாதையை அவரது செயலால் காட்டினார், வார்த்தையால் அல்ல." என கோலி தன் தந்தை குறித்து கூறினார்.
இறப்பின் போது..
"என் தந்தை இறந்த மறுதினம் நான் ரஞ்சி ட்ராபி தொடரில் ஆடினேன். அவரது இறப்பு என் வாழ்க்கையில் நான் ஏதாவது செய்ய வேண்டும் என்பதை உணர்த்தியது. என் தந்தைக்கு அமைதியான ஓய்வு வாழ்க்கை அளித்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என நான் நினைத்துக் கொள்கிறேன். அவரைப் பற்றி யோசிக்கும் போது சில சமயம் உணர்ச்சி வசப்பட்டு விடுவேன்" என்றார்.
அதிர்ச்சித் தகவல்
தன் தந்தையை பற்றி கூறுகையில், டெல்லி கிரிக்கெட் அமைப்பில் நிலவிய லஞ்ச ஊழலை வெளிச்சம் போட்டு காட்டி உள்ளார் விராட் கோலி. சிறந்த வீரராக சிறு வயது முதல் விளங்கிய விராட் கோலிக்கே இதுதான் நிலை என்பது அதிர்ச்சி அளிக்கும் தகவலாக உள்ளது.