ஒருநாள் போட்டி
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் விளையாடிய கேஎல் ராகுல் அவுட் ஆகாமல் 62 ரன்களை குவித்திருந்தார். க்ருணால் பாண்டியாவுடன் இணைந்து 112 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை மேற்கொண்டிருந்தார். இவரது இந்த ஆட்டம் இந்தியாவின் அதிகமான ரன்குவிப்புக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
மோசமான விமர்சனங்கள்
கடந்த சில போட்டிகளில் ஒற்றை இலக்கு ரன்கள் உள்ளிட்ட சொதப்பலான பேட்டிங்கை அளித்து அதன்மூலம் பல்வேறு மோசமான விமர்சனங்களை பெற்றிருந்தார் கேஎல். ராகுல். புதியவர்கள் அனைவரும் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடும் நிலையில், அனுபவமிக்க ராகுல் சொதப்புவது கேள்விகளை எழுப்பியது.
அதிகமான போட்டி
இந்நிலையில் கடந்த போட்டியில் அவர் அடித்துள்ள ரன்கள் விமர்சனம் செய்தவர்களை வாய்மூட செய்துள்ளது. இதனிடையே, இந்திய அணியில் மிகவும் திறமைவாய்ந்தவர்கள் அதிகமாக உள்ளதாகவும் அதனால் போட்டி அதிகமாக இருப்பதாகவும் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார்.
திறமையை நிரூபிக்க வேண்டும்
செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்திய அணிக்காக நாம் விளையாடும்போதும் நம்முடைய இடத்தில் வெறுமனே வசதியாக அமர்ந்து கொண்டிருக்க முடியாது என்றும் அதிகமான மற்றும் திறமையான வீரர்கள் அணியில் இணைந்துக் கொண்டே இருக்கும் நிலையில் ஒவ்வொரு நாளும் நம்மை, நிரூபிக்க வேண்டிய கட்டாயம் உள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.