2015ம் ஆண்டு ராசி மீண்டும் வருமா? எல்லாம் கோலியின் கைகளில் இருக்குப்பா… கை காட்டும் ரசிகர்கள்..!!
மான்செஸ்டர்:2015ம் ஆண்டு சதத்தை இந்த முறையும் பாகிஸ்தானுக்கு எதிராக கேப்டன் விராட் கோலி நிகழ்த்தி காட்டுவார் என்று ரசிகர்கள் ஏக குஷியில் இருக்கின்றனர்.
இதோ.... அதோ என்று பூச்சி காட்டிய மழை இல்லை. ஒரு வழியாக உலக கோப்பை தொடரில் இந்தியா, பாகிஸ்தான் ஆட்டம் மான்செஸ்டரில் தொடங்கி விட்டது. முழுமையாக 50 ஓவர்களை இரு அணிகளும் விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது, இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார். இந்திய அணியில் காயத்தால் தவான் ஆடாததால் ராகுல், ரோகித்துடன் தொடக்க வீரராக களமிறங்கி இருக்கிறார்.

4ம் வரிசையில் விஜய் சங்கர்
அதனால் அவர் இறங்கிவந்த 4ம் வரிசையில் விஜய் சங்கர் இறங்க உள்ளார். உலக கோப்பையில் தனது முதல் போட்டியில் களமிறங்கும் விஜய் சங்கர், முதல் போட்டியிலயே பாகிஸ்தானுக்கு எதிராக களம் காண்கிறார். இது அவருக்கு ஒரு அருமையான வாய்ப்பு. வேறு எந்த மாற்றமும் இந்திய அணியில் இல்லை.

பாசிட்டிவ்வான ஆட்டம்
போட்டியில் முதலில் இந்தியா பேட்டிங் என்பதால் மிகவும் நேச்சுரலான ஆட்டத்தை ஒவ்வொரு வீரரும் வெளிப்படுத்த முடியும். எனவே, இயல்பான ஆட்டம் பொதுவாகவே பாசிட்டிவ்வாக பார்க்கப்படுவதால் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா இமாலய இலக்கை எட்டக்கூடும்.

கோலியின் ராசி
அதற்கு குறிப்பாக கோலியின் ராசி இந்த முறையும் கைகொடுக்கும் என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ஏன் என்றால்.... 2015ம் ஆண்டு உலக கோப்பையில் இந்தியா, பாகிஸ்தானை எதிர்கொண்ட போது அணிக்கு வெற்றியை தேடித் தந்தவர் கோலி.

2015ல் 300 ரன்கள்
2015 உலகக் கோப்பையில் இந்தியா பாகிஸ்தான் மோதிய 'பி' பிரிவு லீக் ஆட்டம் ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்றது. முதலில் ஆடிய இந்தியா 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 300 ரன்கள் குவித்தது.

தோற்றது பாக்.
கடின இலக்கை துரத்திய பாகிஸ்தான், 47 ஓவர்களில் 224 ரன்களுக்குள் ஆட்டமிழந்ததால், 76 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில்107 ரன்கள் குவித்த விராட் கோலி ஆட்ட நாயகனானார்.

காத்திருக்கும் ரசிகர்கள்
அத்துடன், பாகிஸ்தானுக்கு எதிராக உலகக் கோப்பையில் சதத்தை பதிவு செய்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையும் நிகழ்த்தினார். எனவே, அந்த ஆட்டத்தில் அவர் அடித்த ரன்கள் அணியின் வெற்றிக்கு உதவியதால் அதே போன்ற ஒரு ஆட்டத்தை ரசிகர்கள் கோலியிடம் இருந்து எதிர்பார்க்கின்றனர். அது கோலியின் கையில் தான் இருக்கிறது.


Click it and Unblock the Notifications