பிரிஸ்பேன்: பிரிஸ்பேன் 2வது டெஸ்ட் போட்டியின்போது சைவச் சாப்பாடு கிடைக்காமல் ஸ்டேடியத்தை விட்டு வெளியேறி வெளியே போய் சாப்பாடு வாங்கி வந்து அதை உள்ளே கொண்டு வர முடியாமல் வெளியிலேயே உட்காரந்து சாப்பிட்டனர் இஷாந்த் சர்மா, சுரேஷ் ரெய்னா ஆகியோர் என்ற செய்தி வெளியான நிலையில், தற்போது இந்திய வீரர்களுக்கு அருமையான சாப்பாட்டை வழங்க பிரிஸ்பேனில் உள்ள மிஸ் இந்தியா என்ற இந்திய உணவகம் தயாராக இருந்ததாக செய்தி வெளியாகியுள்ளது. ஆனால் இந்திய அணி நிர்வாகம் செய்த குழப்பத்தால்தான் அந்த சாப்பாடும் கூட கிடைக்காமல் போய் விட்ட கதை தெரிய வந்துள்ளது.
இந்த ஹோட்டலின் உரிமையாளர் ரேமன்ட் பிரசாத் என்ற இந்தியர்தான்.
என்ன காமெடி என்றால் அவர்கள் கொடுத்த சாப்பாட்டை வாங்கிப் போக வந்தவர், குறித்த நேரத்திற்கு முன்பாகவே வந்து சீக்கிரமாக கொடுங்கள் என்று அனத்தியதால் அவர்கள் கேட்ட சப்பாத்தியை ரெடி செய்து தர முடியாமல் போய் விட்டதாம்.
இதுகுறித்து மிஸ் இந்தியா உணவகத்தின் செயல் மேலாளர் ரவி கூறுகையில், பிரிஸ்பேனிலேயே மிகச் சிறந்த பிரபலமான இந்திய உணவகம் மிஸ் இந்தியா. ஸ்டேடியத்திலிருந்து 30 மீட்டர் தூரத்தில்தான் எங்களது ஹோட்டல் உள்ளது. விதம் விதமான சைவச் சாப்பாடு எங்களது ஹோட்டலில் தாராளமாக கிடைக்கும்.
கையால் சுட்ட சப்பாத்தி, நான் பிரெட், தந்தூரி என விதம் விதமான சைவச் சாப்பாட்டுக்கு நாங்கள் பிரபலம். .
ஆஸ்திரேலியா முழுவதும் எங்களுக்கு 30 ஹோட்டல்கள் உள்ளன. கடந்த காலத்தில் எங்களது உணவகத்தில் சச்சின் டெண்டுல்கர் சாப்பிட்டிருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி கூட சாப்பிட்டுள்ளார். பல்வேறு பிரபலங்களும் சாப்பிட்டுள்ளனர்.
சம்பவத்தன்று கூட (அதாவது பிரிஸ்பேன் போட்டியின்போது) இந்திய அணிக்காக 50 சப்பாத்திகள் கேட்டிருந்தனர். ஆனால் அதை எங்களால் கேட்ட நேரத்திற்குத் தர முடியவில்லை. எங்களிடம் முற்பகல் 11.30 மணிக்கு சப்பாத்தி தேவை என்று கூறியிருந்தனர். ஆனால் வாங்க வந்தவர் காலை பத்தே முக்கால் மணிக்கே வந்து விட்டார். மேலும் கேட்ட நேரத்திற்கு முன்பே கொடுக்க வேண்டும் என்றும் நிர்ப்பந்தித்தார். ஆனால் அது நிச்சயம் சாத்தியமில்லை. காரணம் எங்களது சமையல்காரர்கள் கையால்தான் சப்பாத்தி சுடுவார்கள். 50 சப்பாத்தியையும் வேகமாக போடு என்றால் நிச்சயம் அது சாத்தியமில்லாதது. எனவேதான் இந்திய அணியினருக்கு சப்பாத்தியை கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.
தவறு எங்கள் மீது இல்லை. கேட்ட நேரத்தில் வந்திருந்தால் நிச்சயம் தரமான சப்பாத்தியை கொடுத்திருப்போம். ஆனால் முன்கூட்டியே வந்து அவசரப்படுத்தியதால்தான் தர முடியாமல் போய் விட்டது. எதிர்காலத்தில் இந்திய அணி நிர்வாகம் நேரத்தை சரியாக பின்பற்றினால் இந்தக் குழப்பத்தைத் தவிர்க்கலாம் என்றார் ரவி.
எதிர்காலத்தில் உங்க ஹோட்டலுக்கு வந்து இந்திய அணியினர் சப்பாத்தி சாப்பிடுவாங்கன்னு இன்னுமா நம்பறீங்க ரவி சார்??