அல்மாட்டி: ஒலிம்பிக்கில் மகளிருக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் கலந்து கொள்ள இந்திய வீராங்களை டூட்டி சந்த் தகுதி பெற்றுள்ளார். இதன் மூலம் 36 ஆண்டுகளுக்குப் பின்னர் அந்த பிரிவில் இந்தியாவின் சார்பில் அவர் பங்கேற்கும் வாய்ப்பை பெறுகிறார்.
கஜகஸ்தானில் அல்மாட்டி நகரில் ஒலிம்பிக் தடகள போட்டிக்கான தகுதி சுற்று நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் இந்திய தரப்பில் டூட்டி சந்த் கலந்து கொண்டார். ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வேண்டுமானால் பந்தய தூரத்தை 11.32 விநாடிகளில் கடக்க வேண்டும் என்ற நிலையில், டூட்டி சந்த் 11.30 விநாடிகளில் பந்தய தூரத்தை கடந்துவிட்டார். இதன்மூலம் 36 ஆண்டுகளுக்குப் பின்னர் 100 மீ ஓட்டத்தில் இந்தியாவின் சார்பில் டூட்டி சந்த் பங்கேற்கிறார். ஒலிம்பிக்கில் கடைசியாக 1980-ம் ஆண்டு நடைபெற்ற 100 மீ ஒட்டத்தில் இந்தியாவின் பி.டி.உஷா பங்கேற்றிருந்தார்.
டூட்டி சந்த் தைவான் தடகள போட்டியில் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டத்தில் தங்க பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒலிம்பிக் வாய்ப்பை பெற்றுள்ள டூட்டி சந்த் கூறுகையில், கடின முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது. நான் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற வேண்டும் என பிராத்தனை மற்றும் ஆதரவு அளித்த அனைவரும் நன்றி. ஒலிம்பிக் போட்டியில் சிறப்பாக செயல்படுவேன் என்று அவர் கூறினார்.
இதனிடையே ஒடிஸா மாநில முதல்வர் நவின் பட்நாய்க், டூட்டி சந்த்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் நவின் பட்நாய்க் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, டூட்டி சந்த் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள தகுதி பெற்றதற்கு வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.
ஒடிஸா மாநிலத்தைச் சேர்ந்தவர் டூட்டி சந்த். கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளின் போதுஅனுமதிக்கப்பட்ட அளவை விட ஸ்டீராய்டு ஹார்மோனை உட்கொண்டதாகக் கூறி அவர் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார். பின்னர் இது தொடர்பான வழக்கின் முடிவில் அவருக்கு சாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டதையடுத்து போட்டிகளில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டது நினைவிருக்கலாம்.