ரியோ: ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் அதிக தங்க பதக்கங்களை வென்ற வீரர் என்ற பெருமையை பெற்ற அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ் தான் நீச்சல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற போவதாக அறிவித்துள்ளார்.
அமெரிக்க வீரரான பெல்ப்ஸ் தனது 15-வது வயதில், 2000-ம் ஆண்டு முதல் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பங்கேற்றார். 2004-ம் ஆண்டு நடைபெற்ற ஏதென்ஸ் ஒலிம்பிக்ஸில் தனது முதல் தங்கப் பதக்கத்தை வென்றார் பெல்ப்ஸ். அவர் ஒலிம்பிக்ஸில் இதுவரை 22 தங்க பதக்கங்கள் உள்ளிட்ட 27 பதக்கங்களை வென்றுள்ளார். 31 வயதான அவர் தற்போது நடைபெற்று வரும் ரியோ ஒலிம்பிக்ஸில் மட்டும் இதுவரை 4 தங்கப் பதக்கம் மற்றும் 1 வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.
இந்நிலையில், தான் போதிய அளவு சாதனை படைத்துவிட்டதால் இந்த ரியோ ஒலிம்பிக்ஸுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தனக்கு புதியதாக பிறந்துள்ள மகன் பூமர் மற்றும் மனைவியுடன் நேரத்தை செலவிடப்போவதாக தெரிவித்துள்ளார்.
இதற்கு முன் 2012-ம் ஆண்டு தான் நீச்சல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக பெல்ப்ஸ் அறிவித்திருந்தார். இதன் பின்னர் தனது முடிவை மாற்றிக் கொண்ட பெல்ப்ஸ், தற்போதைய ரியோ ஒலிம்பிக்கில் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்த முறை எடுத்தது இறுதியான முடிவு என்றும் இதை பிற்காலத்தில் மாற்ற மாட்டேன் என்று கூறியுள்ளார்.
1900-ம் ஆண்டு முதல் ஒலிம்பிக்ஸில் பங்கேற்று வரும் இந்திய அணி ஒட்டுமொத்தமாக 26 பதக்கங்களையே வென்றுள்ள நிலையில், பெல்ப்ஸ் மட்டும் 27 பதக்கங்களை அள்ளியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.