சென்னை : சென்னையில் நடைபெற உள்ள சிறப்பு ஒலிம்பிக் சர்வதேச கால்பந்து சாம்பியன்ஷிப் 2019 தொடருக்கான ஜோதியை ஏந்திச் சென்ற பிரபல நடிகை வரலக்ஷ்மி சரத்குமார், அந்த தொடர் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறார்.
கடந்த 51 ஆண்டுகளில் முதல் முறையாக இந்தியாவில் சிறப்பு ஒலிம்பிக் சர்வதேச கால்பந்து சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற உள்ளது. அதிலும் குறிப்பாக சென்னையில் நடைபெற உள்ளது.

சென்னை ஜவஹர்லால் நேரு உலகக்கோப்பை விளையாட்டு அரங்கில் ஆகஸ்ட் 3 முதல் ஆகஸ்ட் 6 வரை இந்த கால்பந்து சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற உள்ளது. ஆடவர், மகளிர் என இரு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற உள்ளது.
இதற்கான விழிப்புணர்வு பிரச்சாரமாக இந்திய அளவில் ஒலிம்பிக் ஜோதி பயணம் செய்து இறுதியாக சென்னையை வந்து அடைந்தது. பல்வேறு துறையை சேர்ந்த பிரபலங்கள், ஒலிம்பிக் தொடரில் பங்கேற்ற வீரர்கள், மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர்கள் பலரும் இந்த ஜோதியை ஏந்தி வந்தனர்.
இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள வரலக்ஷ்மி சரத்குமார் "இன்று காலையில் நம் சிறப்பு ஒலிம்பிக்கை ஜோதியை வாங்கி தொடங்கி வைத்துள்ளோம். முதல் முறையாக நம் நம்பிக்கை சென்னையில்.. வரும் ஆகஸ்ட் 3 முதல் சென்னை நேரு உலகக்கோப்பை விளையாட்டு அரங்கில் நம் சிறப்பு குழந்தைகளை ஆதரிப்போம்." என குறிப்பிட்டுள்ளார்.
மாற்றுத் திறனாளி விளையாட்டுக்கள் மீதான விழிப்புணர்வு சமீப காலங்களில் அதிகம் பெருகி வருகிறது. ஒலிம்பிக் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளை அடுத்து ஒவ்வொரு முறையும் பாரா ஒலிம்பிக் மற்றும் பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன.
அதற்கான விழிப்புணர்வு அதிகரித்து வருவதோடு, இந்தியா சார்பில் நூற்றுக்கணக்கான சிறப்பு வீரர்கள் பதக்கங்களை அள்ளி வருகிறார்கள். அது போல தற்போது பல்வேறு நாடுகளை சேர்ந்த சிறப்பு கால்பந்து அணிகள் சென்னையில் மோத உள்ளன.
நம் நாட்டு வீரர்களை நேரில் சென்று ஆதரித்து உற்சாக குரல் எழுப்ப சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. வாய்ப்பு உள்ளவர்கள் ஆகஸ்ட் 3 முதல் ஆகஸ்ட் 6 வரை நடைபெற உள்ள சிறப்பு கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரை சென்னையில் நேரில் கண்டு வீரர்களை ஊக்குவிக்கலாம்!