மெடல் கிடைக்கலைன்னு கவலைப்படாதீங்க, எல்லோருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்.. தீபா உற்சாகம்
ரியோ டி ஜெனீரோ: ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் பெறும் வாய்ப்பை நூலிழையில் தவற விட்ட சோகத்தில் தீபா கர்மகர் இருந்தாலும் கூட, அடுத்த முறை நிச்சயம் நமக்குப் பதக்கம் கிடைக்கும் என்று உற்சாகமாக கூறியுள்ளார். மேலும், நாட்டு மக்களுக்கு அவர் சுதந்திர தின வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.
நேற்று இரவு நடந்த ஜிம்னாஸ்டிக்ஸ் வால்ட் பிரிவில் தீபா கர்மகர் நூலிழையில் வெண்கலப் பதக்கத்தைத் தவற விட்டார். அவர் 4வது இடத்தைப் பெற்றார். இதுவே இந்தியாவுக்கு மிகப் பெரிய சாதனைதான்.
தீபாவுக்கு மெடல் கிடைக்காமல் போனது அனைத்து இந்தியர்களையும் சோகத்தில் ஆழ்த்தி விட்டது. சுதந்திர தினப் பரிசாக தீபாவுக்கு பதக்கம் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பில் இருந்தனர் மக்கள். ஆனால் அனைவருமே ஏமாந்து போய் விட்டோம். ஆனால் தீபா அனைவரையும் தட்டி எழுப்பியுள்ளார், தனது சுதந்திர தின வாழ்த்துகள் மூலம்.

இந்த அளவுக்கு வந்ததே மகிழ்ச்சி
இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், உண்மையில் நான் பதக்கத்தை எதிர்பார்க்கவில்லை. இந்த அளவுக்கு வந்ததே பெரிய சாதனைதான். 4வது இடம் பிடிப்பேன் என்பதையே நான் எதிர்பார்க்கவில்லை. அந்த வகையில் நாம் செய்திருப்பது மிகப் பெரிய சாதனைதான்.

குத்துச் சண்டையில் கிடைக்கும்
குத்துச் சண்டை, மல்யுத்தம் போன்றவற்றில் 4வது இடம் பிடித்தாலும் கூட அவர்களுக்கும் வெண்கலப் பதக்கம் கிடைக்கும். ஆனால் ஜிம்னாஸ்டிக்ஸில் அப்படி தருவதில்லை. நான் பதக்கத்திற்கு அருகே வரை போய் விட்டேன். ஆனாலும் வெற்றி பெற முடியாமல் போய் விட்டது.

அடுத்த வாட்டி நமக்குத்தான்
ஆனால் நான் கவலைப்படப் போவதில்லை. எனது அடுத்த இலக்கு 2020 ஒலிம்பிக் போட்டிதான். நிச்சயம் அதில் நாம் தங்கம் வெல்வோம். அதுதான் இப்போது எனது ஒரே லட்சியம்.

நல்ல அனுபவம்
இதகு எனக்கு முதல் ஒலிம்பிக் போட்டிதான். நிறையக் கற்றுக் கொண்டுள்ளேன். எனவே யாரும் ஏமாற்றம் அடைய வேண்டாம். 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் நான் நிச்சயம் தங்கம் வெல்வேன் என்று கூறியுள்ளார் தீபா.
சுதந்திர தின வாழ்த்துகள்
தீபா சுதந்திர தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு தனது இனிய சுதந்திர தின வாழ்த்துகளையும் வீடியோ மூலமாக தெரிவித்து அதை வெளியிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications