சென்னை: இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையே சென்னையில் நடைபெற்ற 4வது ஒருநாள் போட்டியில் 35 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. இதனைத் தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட தொடரை 2 - 2 என்ற கணக்கில் சமன் செய்தது இந்திய அணி.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள, தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2-0 என்ற கணக்கில் டி20 தொடரை வென்றது. 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், முதல் மற்றும் மூன்றாவது போட்டியில் தென் ஆப்பிரிக்காவும், 2வது போட்டியில் இந்தியாவும் வென்றன.
தொடரின், 4வது போட்டி சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது. டாசில் வென்ற இந்தியா முதலில் பேட்டிங்கை தேரந்தெடுத்தது. இந்திய அணி மாற்றமின்றி களமிறங்கியது. தென் ஆப்பிரிக்காவை பொறுத்தளவில், அதிரடி வீரர் டுமினி காயம் காரணமாக 3 வாரங்களுக்கு விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மோர்னே மோர்க்கலும் காயத்தால் வெளியேறியுள்ளார். அவர்களுக்கு பதிலாக, கிறிஸ் மோரிஸ் மற்றும் ஆரோன் பன்கிசோ ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டனர்.
இந்திய தொடக்க வீரர்கள் ரோகித் ஷர்மா 21 ரன்களிலும், ஷிகர் தவான் 7 ரன்களிலும் அவுட்டாகி ஏமாற்றம் தந்தாலும், அஜிங்ய ரஹானே 45 ரன், சுரேஷ் ரெய்னா 53 ரன்கள் குவித்து ஸ்கோரை உயர்த்த உதவினர்.
துணை கேப்டன் கோஹ்லி அபாரமாக ஆடி 140 பந்துகளில் 138 ரன்கள் குவித்து அவுட் ஆனார். இது கோஹ்லியின் 23வது சதமாகும். இதன்மூலம், இந்திய வீரர்கள் வரிசையில் சச்சினுக்கு அடுத்து அதிக சதம் விளாசிய வீரர் என்ற பெருமையை கோஹ்லி பெற்றார்.
22 சதங்கள் விளாசிய கங்குலி 3வது இடத்துக்கு தள்ளப்பட்டார். 45 ஓவர் நிலவரத்தை வைத்து பார்க்கும்போது, இந்தியா 320 ரன்களை தாண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், கடைசி 5 ஓவர்களில் இந்திய பேட்ஸ்மேன்களால் அடித்து ஆட முடியவில்லை. சிங்கிள் ரன்னுக்கே ஏங்கினர். பவுண்டரிகள் வரவேயில்லை.
இதனால் 50 ஓவர்கள் இறுதியில் இந்தியா 8 விக்கெட் இழப்புக்கு 299 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. டோணி 16 பந்துகளில் 15 ரன்கள் மட்டுமே எடுத்து கடைசி ஓவரில் அவுட் ஆனார்.
அவரது பேட்டிங் திறமை இப்போட்டியில் மீண்டும் கேள்விக்குறியாகும் வகையில் அமைந்திருந்ததை ரசிகர்கள் பார்க்க நேரிட்டது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் ரபடா மற்றும் ஸ்டெயின் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங்கை தொடங்கியது. ஆனால் 300 ரன்கள் இலக்கை எட்ட முடியாமல் தென் ஆப்பிரிக்கா 9 விக்கெட்டுக்கு 264 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. இந்தியா 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் டி வில்லியர்ஸ் 112 ரன்கள் குவித்தார். 5 போட்டிகள் கொண்ட தொடரை 2 - 2 என்ற கணக்கில் சமன் செய்தது இந்திய அணி. இந்த தொடர் யாருக்கு என்பதை முடிவு செய்யும் 5வது போட்டி வரும் ஞாயிறன்று மும்பையில் நடைபெற உள்ளது.