கொழும்பு:இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், ஒரே இன்னிங்ஸில் 9 விக்கெட்களை வீழ்த்தி தென்னாப்பிரிக்காவின் கேசவ் மகாராஜ் புதிய சாதனையைப் படைத்தார்.
தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி இலங்கையில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் இலங்கை வென்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று துவங்கியது.
முதலில் பேட்டிங் செய்த இலங்கை, முதல் இன்னிங்சில் 338 ரன்கள் எடுத்தது. தனுஷ்கா குணதிலகா 57, திமுத் கருணாரத்னே 53, தனஞ்சயா டிசில்வா 60 ரன்கள் என இலங்கை வீரர்கள் கலக்கலாக விளையாடி வந்தனர்.
இந்த நிலையில்தான், இந்தியாவை பூர்வீகமாக கொண்ட தென்னாப்பிரிக்காவின் கேசவ் மகாராஜ் விக்கெட் வீழ்த்த துவங்கினார். 41.1 ஓவர்களில் 129 ரன்களுக்கு 9 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார் மகாராஜ்.
ஒரே இன்னிங்சில் 9 விக்கெட்களை வீழ்த்திய 2-வது தென்னாப்பிரிக்க வீரர் மற்றும் 19வது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார் தென்னாப்பிரிக்காவின் ஹூக் டேபீல்ட், 1957ல் இங்கிலாந்துக்கு எதிராக 113 ரன்களுக்கு 9 விக்கெட்களை வீழ்த்தினார். சர்வதேசப் போட்டிகளில் தென்னாப்பிரிக்கா மீண்டும் விளையாட துவங்கியப் பிறகு, 9 விக்கெட்களை வீழ்த்திய முதல் வீரரானார் மகாராஜ்.
இவரையும் சேர்த்து இதுவரை 19 பேர் ஒரு இன்னிங்சில் 9 விக்கெட்களை வீழ்த்தியுள்ளனர். இதுவரை 2 பேர் மட்டுமே ஒரு இன்னிங்சில் 10 விக்கெட்களை வீழ்த்தியுள்ளனர். ஜிம் லாகர் 53 ரன்களுக்கு 10 விக்கெட்களையும், அனில் கும்ப்ளே 74 ரன்களுக்கு 10 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளனர்.