சென்னையில் ஆப்கன் அணி பயிற்சி
ஆப்கானிஸ்தான் அணி அடுத்த மாதம் இலங்கை சென்று கிரிக்கெட் ஆட உள்ளது. அதற்கு முன்னதாக நீண்ட கால பயிற்சி மேற்கொள்ள முடிவு செய்தது ஆப்கன் அணி. இதற்காக சென்னையில் உள்ள "ஸ்ரீ ராமச்சந்திரா சென்டர் ஃபார் ஸ்போர்ட்ஸ் சயின்ஸ்" என்ற விளையாட்டு பயிற்சி மையத்தை தேர்வு செய்துள்ளது.
பயிற்சியில் 36 வீரர்கள்
தற்போது சுமார் 36 ஆப்கன் வீரர்கள் இங்கே தங்கி பயிற்சி மேற்கொண்டுள்ளனர். ஆப்கன் அணியின் முக்கிய வீரர்கள் ரஷித் கான், முஜீபுர் ரஹ்மான் மற்றும் முஹம்மது சேஷாத் ஆகியோர் துபாயில் நடைபெற்று வரும் டி10 லீக் என்ற 10 ஓவர் போட்டிகள் தொடரில் ஆடி வருகின்றனர். அந்த தொடர் முடிந்தவுடன் அந்த வீரர்களும் இந்த மையத்தில் இணைந்து பயிற்சி மேற்கொள்வார்கள் என கூறப்படுகிறது.
திருப்தி அடைந்த வீரர்கள்
தற்போது சென்னையில் மழை பெய்து வருவதால் உள்ளரங்கில் பயிற்சியை மாற்றிக் கொண்டுள்ளனர் ஆப்கன் வீரர்கள். வீரர்கள் இந்த மையத்தில் இருக்கும் வசதிகள் தங்களுக்கு திருப்திகரமாக இருப்பதாக தெரிவித்து உள்ளனர். ஆப்கன் கிரிக்கெட் போர்டு இந்த மையத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. அதன்படி ஆப்கன் வீரர்கள் இனி தொடர்ந்து இங்கே பயிற்சி மேற்கொள்ளவும், காயத்தில் இருந்து மீளவும் வருகை தருவார்கள்.
இங்கே வரக் காரணம் என்ன?
ஆப்கன் கிரிக்கெட் தங்கள் நாட்டை விட்டு விட்டு சென்னைக்கு வந்து பயிற்சி மேற்கொள்ள காரணம், இங்கே கிடைக்கும் நவீன வசதிகள் மட்டுமல்ல, ஆப்கானிஸ்தானில் இன்னும் அமைதி ஏற்படவில்லை என்பதே ஆகும். அங்கே இன்னும் அமெரிக்க படைகள் அவர்கள் நாட்டை விட்டு முழுமையாக வெளியேறவில்லை. அதே போல, தீவிரவாத தாக்குதல்களும் முடிவுக்கு வந்த பாடில்லை.
ஆப்கன் அணி சென்னையில் பயிற்சி செய்வது நம்ம ஊருக்கு கிடைத்த பெருமை.. வந்தாரை வாழ வைப்போம்!!