லாக்டவுன்
கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக லாக்டவுன் அமலில் உள்ளது. மக்கள் காலை 6 மணி முதல் 1 மணி வரை மட்டுமே அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியும் என்ற நிலை இருந்தது. இந்த கட்டுப்பாடுகள் மக்களுக்கு சிரமமாக இருந்தாலும் நோய்த் தொற்றை தடுக்க மக்கள் பெரும்பாலும் இந்த கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து வருகின்றனர்.
கடும் ஊரடங்கு
ஆங்காங்கே, வெளியே சுற்றும் நபர்களை காவல்துறை சரியாக "கவனித்து" வீட்டுக்கு அனுப்பி வைக்கிறது. இந்த நிலையில், ஏப்ரல் 26 முதல் 29 முதல் நான்கு நாட்களுக்கு தமிழகத்தில் சென்னை, கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு கடும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்த உள்ளதாக அரசு அறிவித்தது.
பொருட்கள் வாங்க வேண்டிய நிலை
அதனால், மக்கள் நான்கு நாட்களுக்கு காய்கறி, மளிகை பொருட்கள் வாங்கக் கூட வெளியே செல்லக் கூடாது என கூறப்பட்டது. அதனால், நான்கு நாட்களுக்கு வேண்டிய பொருட்களை வாங்க வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர்.
மக்கள் கூட்டம்
அதனால், சனிக்கிழமை அன்று காய்கறி சந்தைகள், மளிகைக் கடைகள், பால் விற்பனையகங்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை. எனினும், மக்கள் பெரும்பாலும் முகக் கவசம் அணிந்தே இருந்தனர்.
வைரஸ் விற்பனைக்கு
இந்த நிலையில், கிரிக்கெட் வீரர் அஸ்வின் சென்னையில் ஒரு பகுதியில் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருப்பதை குறிப்பிட்டு ஒரு புகைப்படம் வெளியிட்டார். அந்த பதிவில் "வைரஸ் இப்போது விற்பனைக்கு. நாம் அதை வாங்கலாம் அல்லது மற்றவர்களுக்கு பகிர்ந்து அளிக்கலாம். பயங்கரமான நேரம் வந்து கொண்டு இருக்கிறது" என குறிப்பிட்டு இருந்தார்.
வைரஸை பரப்ப வாய்ப்பு
அதாவது மக்கள் சமூக இடைவெளி கடைபிடிக்காமல், சிலர் முகக்கவசம் அணியாமல் இருப்பதால் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் இருப்பதாகவும், இவர்கள் வைரஸை பரப்ப வாய்ப்பு உள்ளதாக குறிப்பிட்டு இருக்கிறார் அஸ்வின்.
மக்கள் கேள்வி
இந்த பதிவிற்கு பலரும் கடும் எதிர்ப்பு கூறி வருகின்றனர். பலரும் "உங்கள் வீட்டில் பொருட்கள் நிரம்பி இருக்கும், மற்றவர்கள் அப்படியா?" என கேள்வி எழுப்பி உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் அஸ்வின், சமூக இடைவெளி இல்லை என்பதை பற்றி பேசுங்கள் என பதில் கூறி வருகிறார்.
தியாகம் செய்துள்ளார்கள்
பலரும் அரசு அவசரமாக அறிவித்த ஊரடங்கால் தான் இப்படி குவிந்து வருகின்றனர். எனவே, மக்களை குறை சொல்வதில் அர்த்தம் இல்லை என கூறுகின்றனர். ஒருவர் தங்கள் குடும்பத்தை பாதுகாக்க இவர்கள் தியாகம் செய்து வெளியே வந்துள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
விடாப்பிடியாக பதில்
தனக்கு எதிராக பதில் சொன்னவர்களுக்கு அஸ்வினும் விடாப்பிடியாக பதில் அளித்து இருப்பதால் இந்த கருத்து மோதல் ட்விட்டரில் சூடு பிடித்துள்ளது. ஆயிரக்கணக்கில் ட்விட்டர்வாசிகள் அவருக்கு பதில் அளித்துள்ளனர். அரசு இரு நாட்களுக்கு முன்பே கூறி இருந்தால் கூட மக்கள் கூட்டம் இத்தனை அதிகமாக இருக்காது என சிலர் கூறி இருப்பது நியாயமாகவே உள்ளது.