டாக்கா: வங்கதேச அணியின் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மான், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஐபிஎல் உள்ளிட்ட வெளிநாட்டு டி-20 லீக் போட்டிகளில் விளையாட வங்கதேச கிரிக்கெட் சங்கம் தடை விதித்துள்ளது.
வங்கதேச கிரிக்கெட் அணியின் முக்கிய வீரரான முஸ்தாபிசுர் ரஹ்மான், இந்தாண்டு நடந்த ஐபிஎல் போட்டியின்போது மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார்.
அப்போது அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரில் வங்கதேசம் அணிக்கு அவர் விளையாடவில்லை. அதேபோல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டித் தொடரிலும் அவர் விளையாடவில்லை.
அதனால், ஐபிஎல் உள்பட மற்ற நாடுகளில் நடத்தப்படும் டி-20 லீக் போட்டிகளில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு விளையாட ரஹ்மானுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு கிரிக்கெட் சங்கத் தலைவர் நஸ்முல் ஹாசன் தெரிவித்துள்ளார்.
2016ல் டுவென்டி20 பிளாஸ்ட் போட்டியில் விளையாடியபோது ரஹ்மான் காயமடைந்தார். அதனால், இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாடவில்லை. 2017லும் வங்கதேச பிரீமியர் லீக் போட்டியின்போது காயமடைந்ததால், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் அவர் விளையாடவில்லை.
இவ்வாறு அவர் அடிக்கடி காயமடைவதால், வங்கதேச அணிக்காக விளையாட முடிவதில்லை. அதனால், ஐபிஎல் போன்ற வெளிநாட்டில் நடக்கும் டி-20 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஹாசன் கூறியுள்ளார்.