பெரிய மைனஸ்
இந்த தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்ததற்கான காரணங்கள் குறித்து தற்போது காணலாம். முதல் ஒரு நாள் போட்டி ஆக்லாந்து நகரில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 306 ரன்கள் குவித்து தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற பிரகாசமான வாய்ப்பு இருந்தது. எனினும் கூடுதலாக ஒரு பந்துவீச்சாளரை சேர்க்காமல் இந்திய அணி விளையாடியது பெரிய தவறாக அமைந்தது. அணியில் சொதப்பி வரும் ரிஷப் பண்ட்டுக்கு பதிலாக தீபக் ஹூடா போன்ற ஆல் ரவுண்டரை இந்திய அணி நிர்வாகம் சேர்க்காமல் போனது பெரிய மைனஸ் ஆக பார்க்கப்பட்டது.
சஞ்சு சாம்சன் இல்லை
இந்த நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டி மழையால் பாதிக்கப்பட்டது. இதில் போட்டி 50 ஓவர் நடந்திருந்தாலும் நியூசிலாந்து அணியே வென்றிருக்கும். காரணம் பிளேயிங் லெவனில் இந்தியா பெரிய தவறை செய்தது. தீபக் ஹூடா என்ற ஆல் ரவுண்டரை பிளேயிங் லெவனில் சேர்த்தாலும், சஞ்சு சாம்சன் போன்ற ஃபார்மில் இருந்த வீரர்களை தவான் நீக்கியது பெரிய தவறாக பார்க்கப்பட்டது. ஏதோ மழை வந்து அந்த ஆட்டத்தில் இந்தியாவை காப்பாற்றியது.
தொடரும் ரிஷப் பண்ட்
எனினும் அதே தவறை தான் மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்தியா செய்தது.சஞ்சு சம்சனுக்கு பதில் ரிஷப் பண்டை அணியில் சேர்த்தார்கள். ஆனால் அவர் மூன்றாவது ஒருநாள் போட்டியில் 16 பந்துகள் எதிர்கொண்டு வெறும் 10 ரன்களை மட்டுமே அடித்து இருந்தார். ரிஷப் பண்ட் திறமையான வீரராக இருந்தாலும், தற்போது அவருக்கு போதிய அளவு நம்பிக்கை இல்லாமல் இருக்கிறார். இதனால் அவருக்கு ஓய்வு வழங்கிவிட்டு மீண்டும் அணிக்கு திரும்ப பிசிசிஐ நேரம் வழங்கி இருக்க வேண்டும். அவருக்கு பதிலாக நல்ல பார்மில் இருக்கும் சஞ்சு சம்சனை அணியில் சேர்த்து இருக்க வேண்டும்.
சாஹலின் குறை
இந்த தொடரில் பிசிசிஐ செய்த பெரிய தவறு இதுதான். இதேபோன்று வேகப்பந்து வீச்சில் இந்திய அணி அனுபவம் இல்லாத வீரர்களை தேர்வு செய்து இருக்கிறது. இதனால் அவர்களை குறை சொல்லி எந்த பயனும் இல்லை. நிச்சயமாக இன்று தொடர் உம்ரான் மாலிக் மற்றும் ஆர்ஸ்தீப் சிங்கிற்கு நல்ல அனுபவத்தை கொடுத்திருக்கும். இதேபோன்று ஷர்துல் தாக்கூர் காயம் காரணமாக இரண்டாவது மற்றும் மூன்றாவது ஆட்டத்தில் இடம் பெறாதது இந்திய அணிக்கு குறையாக பார்க்கப்படுகிறது.இதேபோன்று சாஹல் ஒருநாள் தொடரில் செயல்பட்ட விதம் மிகவும் ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. முதல் ஒரு நாள் ஆட்டத்தில் சாஹலை விட வாஷிங்டன் சுந்தர் 10 ஓவர் வீசி 42 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்திருந்தார்.
சூர்யகுமாரின் தாக்கம்
ஆனால் சாஹல் 60 ரன்களுக்கு மேல் வழங்கி இருந்தார். சாஹல் விக்கெட்டுகளை வீழ்த்தி ரன்களை கட்டுப்படுத்தும் திறமையை தவற விட்டது இதற்கு காரணம் ஆகும் இதனால் சாஹலுக்கு பதிலாக குல்தீப் யாதவை இந்திய அணி சேர்த்து இருக்க வேண்டும். இந்திய அணியில் பேட்டிங் பெரிய ஏமாற்றத்தை தந்தது. சூரியகுமார் டி20 கிரிக்கெட்டில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார். ஆனால், அவர் ஒரு நாள் ஆட்டத்தில் அவருடைய திறமையை இன்னும் வெளிப்படுத்தவில்லை. சூரிய குமார் யாதவ் தனது அதிரடியை காட்டி இருந்தால் இந்திய அணி முதல் ஒருநாள் போட்டியிலும், மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் ஓரளவுக்கு கூடுதல் ரன்களை பெற்றிருக்கும்.