வாகன் விமர்சனம்
இங்கிலாந்து அணி பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியா என மூன்று அணிகளிடம் தோல்வி அடைந்து அரையிறுதி வாய்ப்பை சிக்கலாக மாற்றிக் கொண்டது. உலகக்கோப்பை தொடர் துவங்கும் முன் உலகக்கோப்பை வெல்லும் அணி என ஒட்டு மொத்தமாக எல்லோராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட இங்கிலாந்து அணி இப்படி மோசமாக செயல்படுவதை கண்டு முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார்.
பீட்டர்சன் நக்கல்
அதே போல, ஆஸ்திரேலிய போட்டிக்கு பின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன், இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கன் குறித்து "குறி" வைத்து தாக்கி விமர்சனம் செய்து இருந்தார். அதற்கு மார்கனும் பதிலடி கொடுத்தார்.
பேரிஸ்டோ பதிலடி
அதே போல, மைக்கேல் வாகன் விமர்சனத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கருத்து தெரிவித்த பேரிஸ்டோ, இங்கிலாந்து மக்கள், ஊடகங்கள் இங்கிலாந்து அணியை ஆதரிக்காமல் கைவிட்டு விட்டது. மைக்கேல் வாகன் பேசியதை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். பலரும் இங்கிலாந்து அணி எப்போது தோல்வி அடையும் என காத்துக் கொண்டு இருக்கிறார்கள் என்று வாகனை சுட்டிக் காட்டினார்.
வெளுத்து கட்டிய வாகன்
பேரிஸ்டோவின் கருத்துக்கு மைக்கேல் வாகன் கடுமையாக பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறுகையில், இங்கிலாந்து அணிக்கு இப்போது இருப்பது போன்ற ஆதரவு எப்போதும் இருந்ததில்லை. ஆனால், நீங்களும், உங்கள் அணியும் தான் ஏமாற்றினீர்கள். அடுத்து 2 போட்டிகளில் வெற்றி பெற்றால் நீங்கள் அரையிறுதியில் இருக்கலாம்.
கவலை
ஆனால், இது போன்ற எதிர்மறை மனநிலையுடன் எனக்கு கவலையாக உள்ளது. நீங்கள் மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்தது ஊடகங்களின் தவறு இல்லை என்று பேரிஸ்டோவை கடுமையாக விமர்சித்து கூறினார் மைக்கேல் வாகன்.
இந்தியா போட்டிக்கு முன்..
இந்திய அணிக்கு எதிரான முக்கிய போட்டிக்கு முன் இங்கிலாந்து வீரர்கள், முன்னாள் வீரர்களுடன் மல்லுக்கு நின்று வருவது அந்த அணிக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அதைத் தான் மைக்கேல் வாகனும் கூறியுள்ளார். என்ன செய்யப் போகிறது இங்கிலாந்து அணி?