காரை கழுவ குடிநீர்
விராட் கோலியின் குரூர்கிரம் வீட்டில் ஆறுக்கும் மேற்பட்ட கார்கள் உள்ளன. அந்த கார்கள் குடிநீரில் கழுவி சுத்தம் செய்யப்பட்டு வந்துள்ளது. தற்போது நாடு முழுவதும் கடும் குடிநீர் பஞ்சம் இருக்கும் நிலையிலும், கோலி வீட்டில் பணியாளர்கள் குடிநீரை பயன்படுத்தி கார்களை கழுவி வந்துள்ளனர்.
புகார் அளித்தார்
அதைக் கண்ட பக்கத்துக்கு வீட்டுக்காரர், பொறுக்க முடியாமல் முனிசிபாலிட்டி அலுவலகத்தில் புகார் செய்துள்ளார். இதையடுத்து அந்த பகுதிக்கு வந்த முனிசிபாலிட்டி அதிகாரிகள், விராட் கோலி வீட்டில் காருக்கு குடிநீரை பயன்படுத்தி கழுவி வந்த பணியாளரை கையும், களவுமாக பிடித்து.... ரூ.500 அபராதம் விதித்தனர். (அடேங்கப்பா.. பெரிய தொகை!)
சம்பந்தம் இல்லை
எனினும், விராட் கோலிக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல, அபராதத் தொகைக்கான சார்ஜ் ஷீட் அந்த பணியாளர் பெயரிலேயே கொடுக்கப்பட்டுள்ளது. விராட் கோலி வீடு மட்டுமில்லாமல், பல வீடுகளுக்கும் இதே போல அபராதம் (ரூ.500!!!) விதித்ததாக அதிகாரிகள் விளக்கமும் கூறியுள்ளனர்.
தோனி வீட்டில் திருட்டு
அடுத்து தோனி வீட்டில் திருட்டு என்று ஒரு பரபர செய்தி. என்னவென்று பார்த்தால், நொய்டாவில் தோனி வாடகைக்கு விட்டிருக்கும் வீட்டில் கடந்த ஏப்ரல் மாதம் சில பொருட்கள் களவு போயுள்ளன. அது குறித்து காவல்துறையில் புகாரும் அளிக்கப்பட்டது.
எலக்ட்ரானிக் பொருட்கள்
அந்த பொருட்கள் எதுவும் தோனியுடையது அல்ல. தோனி நொய்டா வீட்டை விக்ரம் சிங் என்பவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார். விக்ரம் சிங், வீட்டை புதுப்பிக்க விட்டிருந்த போது, வீட்டில் வைத்திருந்த பல எலக்ட்ரானிக் பொருட்கள் காணாமல் போனது.
சிக்கினர்
இது தொடர்பாக மூன்று திருடர்களை தற்போது காவல்துறையினர் வலைவீசி பிடித்துள்ளனர். அவர்கள் நொய்டா பகுதியில் பல வீடுகளில் இதே போல பல எலக்ட்ரானிக் பொருட்களை திருடியுள்ளனர். அவர்களிடம் கைப்பற்றப்பட்ட பொருட்களில் தோனியின் வீட்டில் களவு போன எல்ஈடி டிவி கிடைத்துள்ளது.
காலிங் பெல்
அந்த மூன்று திருடர்களும் மிகவும் எளிமையான முறையில், நேரத்தை வீணாக்காமல் திருடியுள்ளனர். ஆளரவம் குறைவாக இருக்கும் பகுதிகளுக்கு சென்று, அங்கே இருக்கும் வீடுகளில் காலிங் பெல் அடித்துப் பார்ப்பார்களாம்.
வேவு பார்ப்பது இல்லை
யாரும் கதவை திறக்கவில்லை என்றால், கதவை உடைத்து உள்ளே இருக்கும் எலக்ட்ரானிக் பொருட்களை எளிதாக எடுத்துக் கொண்டு வந்து விடுவார்களாம். வேவு பார்ப்பது, திட்டம் போட்டு திருடுவது எல்லாம் அவர்கள் லிஸ்டிலேயே இல்லை. எப்படியோ சிக்கின வரை சந்தோஷம்.