தோனி ராணுவ முத்திரை கிளவுஸை அணியக் கூடாது.. அதுதான் சரியான தீர்வு.. ஏன் தெரியுமா?
Recommended Video
மும்பை: தோனியின் ராணுவ முத்திரை கிளவுஸ் விவகாரம் கிரிக்கெட் உலகை மட்டுமல்லாது, இந்திய ராணுவம், அரசியல்வாதிகள், ரசிகர்கள், கிரிக்கெட்டே பார்க்காத மக்கள் என அனைவரையும் பாதித்துள்ளது.
ஒரு விக்கெட் கீப்பிங் கிளவுஸ் இந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்துமா? இது என்ன.. இதை விட பெரிய தாக்கத்தை கூட ஏற்படுத்தும், என "நவீன சமூக வலைதள நாகரீகம்" நமக்கு உணர்த்தியுள்ளது.
சரி, கிரிக்கெட் போட்டிகளில் ராணுவ முத்திரை பதித்த கிளவுஸை தோனி அணியலாமா.. கூடாதா? என்று கேட்டால்.. அணியக் கூடாது என்பது தான் நியாயமான பதிலாக இருக்கும்.

லெப்டினன்ட் கலோனல்
இந்திய ராணுவத்தில் தோனி பாரா மிலிட்டரி பிரிவில் லெப்டினன்ட் கலோனல் என்ற உயரிய பதவியில் இருக்கிறார். இது கௌரவ பதவிதான் என்றாலும், இந்திய ராணுவத்தை பொறுத்தவரை தோனி மிலிட்டரியை சேர்ந்த ஒருவர் தான்.

பத்ம விருது
இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் ஜனாதிபதியிடம் பத்ம விருது வாங்கச் சென்ற போது தோனி முழுமையான ராணுவ உடை அணிந்து தான் அந்த விருதை பெற்றுக் கொண்டார். தோனி ஒரு ராணுவ அதிகாரி என்பதுதான் இதற்கு முக்கிய காரணம்.

உரிமை
இந்த நிலையில், பாரா மிலிட்டரி படைப் பிரிவின் ராணுவ முத்திரையை தன் விக்கெட் கீப்பிங் கிளவுஸில் தோனி பயன்படுத்தியது அவரது உரிமை. அதில் சந்தேகமில்லை. அதே சமயம், அந்த முத்திரையை தோனி தன் தனிப்பட்ட விருப்பத்தின் பெயரில் தான் கிளவுஸில் பதித்துள்ளார். இதில் இந்திய ராணுவத்துக்கு எந்த சம்பந்தமும் இல்லை.

கட்டுப்படுத்தவில்லை
குறிப்பாக, தோனி அந்த முத்திரையை அணிந்து உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் விளையாடக் கூடாது என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் எடுத்த முடிவு, எந்த வகையிலும் இந்திய ராணுவத்தை கட்டுப்படுத்தவோ, சம்பந்தப்படுத்தவோ இல்லை. அது முற்றிலும் தோனி மற்றும் இந்திய கிரிக்கெட் அணி குறித்த விஷயமே.

விதி என்ன?
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) விதிகளின் படி ஒரு வீரர் தனிப்பட்ட செய்திகள், முத்திரை ஆகியவற்றை தன் உடை மற்றும் உபகரணங்களில் பயன்படுத்தக் கூடாது. அப்படிப் பார்த்தால் தோனி நிச்சயம் அந்த கிளவுஸை பயன்படுத்தக் கூடாது.

அவர்கள் செய்தார்களே!
ஆனால், சிலர் இங்கிலாந்து அணி பல முறை ராணுவ வீரர்களுக்கு மரியாதை அளிக்கும் வகையில் தங்கள் உடையில் முத்திரை பதித்து ஆடியுள்ளனர் என்றும், பாகிஸ்தான் வீரர்கள் மைதானத்தின் நடுவே தொழுகை செய்தார்கள். இதெல்லாம் மட்டும் அனுமதித்ததே ஐசிசி? என கேட்கிறார்கள்.

முன் அனுமதி
இந்திய அணி கூட சமீபத்தில் முன் அனுமதி பெற்று ராணுவ தொப்பி அணிந்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் தொடரில் விளையாடியது. ஒரு குறிப்பிட்ட காரியத்திற்காக, கிரிக்கெட் அணிகள் முன் அனுமதி பெற்று சில காரியங்களை செய்கின்றன. இதற்கும், தனி நபரான தோனி, ராணுவ முத்திரை பதித்த கிளவுஸ் அணிந்து விளையாடியதற்கும் வித்தியாசம் உள்ளது.

இதுதான் தீர்வு
ஒருவேளை, ஐசிசி தோனிக்கு மட்டும் சிறப்பு அனுமதி அளித்து ராணுவ முத்திரை பயன்படுத்த ஒப்புக் கொண்டால் அது தவறான முன்னுதாரணமாக இருக்கும். இதே விஷயம் தோனிக்கு நடக்காமல், வேறு வீரர்களுக்கு நடந்து இருந்தால், வேறு நாட்டு வீரர்களுக்கு நடந்து இருந்தால்.. இத்தனை பெரிய தாக்கம் ஏற்பட்டும் இருக்காது. எனவே, தோனி ராணுவ முத்திரை இல்லாத கிளவுஸ் அணிவதே சரியான தீர்வு!


Click it and Unblock the Notifications