இராணுவப் படை வெல்லும்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தன் மூன்றாவது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. டெல்லியில் நடைபெறும் இந்தப் போட்டியில் தினேஷ் கார்த்திக்கின் இராணுவப் படை போன்ற கொல்கத்தா தான் வெல்லும் என்பதே ரசிகர்களின் எண்ணமாக இருக்கிறது.
இராணுவப் படையா?
அது என்ன இராணுவப் படை? அந்தளவுக்கு யார் இருக்கா? எனக் கேட்டால், அதிரடி பேட்ஸ்மேன்கள், சுழற் பந்துவீச்சு கூட்டணி, ஆல்-ரவுண்டர்கள்.. இது தான் கொல்கத்தா அணியின் பலமாக இருக்கிறது.
நீளமான வரிசை
அதிரடி பேட்டிங்கில் மிக நீளமான வரிசையை கொண்ட ஒரே அணி கொல்கத்தா தான். ஒருவர் விட்டால், ஒருவர் போட்டியை கையில் எடுத்துக் கொள்ளும் திறமை பெற்றவர்களாக விளங்கியதை இரண்டு போட்டிகளில் காண முடிந்தது.
அதிரடி தான் பலம்
நிதிஷ் ராணா, ராபின் உத்தப்பா, ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன் என இவர்களது அதிரடி, பலமடங்கு பலம் வாய்ந்த பேட்டிங் வரிசை கொண்ட அணியாக கொல்கத்தாவை மாற்றியுள்ளது. இவர்கள் தவிர்த்து தினேஷ் கார்த்திக், ஷுப்மன் கில் தங்கள் திறமையை வெளிக் காட்ட தகுந்த சந்தர்ப்பம் பார்த்து காத்துக் கொண்டு இருக்கின்றனர்.
சுழற் பந்துவீச்சில் யார்?
சுழற் பந்துவீச்சில் குல்தீப் யாதவ், பியுஷ் சாவ்லா, சுனில் நரைன் என சிறந்த பந்துவீச்சாளர்களை வைத்துள்ளது கொல்கத்தா. இவர்கள் இதுவரை பெரியளவில் தங்கள் பலத்தை காட்டவில்லை என்றாலும், சுழலுக்கு ஒத்துழைக்கும் டெல்லி மைதானத்தில் இவர்கள் கலக்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
சிறந்த ஆல்-ரவுண்டர்கள்
ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன் என்ற இரண்டு சிறந்த ஆல்-ரவுண்டர்கள் இருப்பது கொல்கத்தா அணிக்கு அதிக பந்துவீச்சு வாய்ப்புகளை வழங்கியுள்ளது. இரண்டு போட்டிகளிலும் ஆறு, ஏழு பந்துவீச்சாளர்கள் பந்து வீசுவதால் கேப்டனுக்கு பந்துவீச்சாளர்களை தேர்வு செய்வதில் அதிக சிக்கல் இருப்பதில்லை.
டெல்லி கேபிடல்ஸ் பலவீனம்
மறுபுறம் டெல்லி கேபிடல்ஸ் அணியில் ரிஷப் பண்ட், தவான் மட்டுமே இரண்டு போட்டிகளிலும் சிறப்பாக ஆடிய பேட்ஸ்மேன்களாக விளங்குகின்றனர். அதிலும், தவான் நிதானமாக ஆடுவதாக குற்றச்சாட்டு உள்ளது. பந்துவீச்சு ஓரளவு சிறப்பாக இருந்தாலும், கேப்டன் சரியாக அவர்களை பயன்படுத்துவதில்லை என்ற பேச்சும் உள்ளது.
டெல்லி "கேபிடலை" கைப்பற்ற வரும் கொல்கத்தா ராணுவப் படை வெற்றி பெறுமா?