நிதானம் காட்டிய தோனி
இந்த கட்டத்தில், இந்திய அணியின் தோல்வி உறுதி ஆனது. இதன் பின்னர், தோனி அதிரடியாக ஆடுவாரா? என பலரும் எதிர்பார்த்த நிலையில், அப்போதும் அவரால் ரன் குவிக்க முடியவில்லை. இதனால் பலரும், தோனியின் நிதான ஆட்டத்தை விமர்சித்து வருகிறார்கள். ஒரு வீரர், ஒரே ஒரு ஆட்டத்தில் தன் இயல்பான ஆட்டத்தில் விளையாடா விட்டால் அது தவறா? அந்த நேரத்தில், நாளில், களத்தின் தன்மை என்ன? ஒரு இலக்கை துரத்தும் போது ஏற்படும் அழுத்தம், இவையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் விமர்சனம் செய்வது சரியல்ல.
ஏன் ரன் இல்லை
அந்த போட்டியில் குறைவான ரன் கொடுத்த பௌலர்கள், சுழல் பந்து வீச்சாளர்களே! குல்தீப் தவிர்த்து, சாஹல் ஓவருக்கு 4.3 ரன்கள் மட்டுமே கொடுத்தார். இங்கிலாந்து சார்பில், ரஷித் மற்றும் மொயின் அலி, ரன்களை வெகுவாக கட்டுப்படுத்தினர். இரண்டாவது இன்னிங்க்ஸ் ஆடும் போது பந்து அதிகம் திரும்பியதும் இந்திய பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்க முடியாமல் போனதற்கு முக்கிய காரணம். இதையெல்லாம், கருத்தில் கொள்ளாமல் தோனியை விமர்சிப்பது சரியா?
ரெய்னாவும் நிதான ஆட்டம்தான்
அதே ஆட்டத்தில் ரெய்னா 63 பந்துகளில் 46 ரன்கள் எடுத்தார். முன்னூறுக்கும் மேற்பட்ட இலக்கை துரத்தும் போது, இது கூட ஒரு வகையில் நிதான ஆட்டம்தான். ஆனால், இது யார் கண்களையும் உறுத்தவில்லை. ஏதாவது ஒரு போட்டியில் தோனி அடித்துவிட்டால் அவரை புகழ்வதும், ஒரு போட்டியில் சொதப்பி விட்டால், அவரை பற்றி மிகக் கடுமையான விமர்சனம் வருவதும் கடந்த சில வருடங்களாக அதிகரித்துள்ளது.
எப்போதும் அதிரடி சாத்தியமில்லையே
குறிப்பாக, ஐபிஎல் போன்ற டி20 தொடர்கள் வரவுக்குப் பின், உருவான புதிய கிரிக்கெட் ரசிகர்கள் ஒருநாள் போட்டிகளையும் டி20 போன்றே அதிரடியாக ஆட வேண்டும் என நினைக்கிறார்கள். அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு இந்திய பேட்ஸ்மேனின், இதே லார்ட்ஸ் மைதானத்தில் ஆடிய உலகக்கோப்பை இன்னிங்க்ஸ் உண்டு.
கட்டை ராஜா கவாஸ்கர்
1975 முதல் கிரிக்கெட் உலகக்கோப்பையில் இந்திய அணியின் "மாஸ்டர்" பேட்ஸ்மேன் சுனில் கவாஸ்கர், முதல் ஓவரில் இருந்து கடைசி ஓவரான 60வது ஓவர் வரை 174 பந்துகளை சந்தித்து களத்தில் நின்றார். அப்போது அவர் எடுத்த ரன்கள் 36. இங்கிலாந்து அடித்த 334 ரன்களை துரத்திய இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்து, 202 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. மறக்க முடியுமா அதை!