தோனியின் நிதான ஆட்டம் சரியா? தவறா?....டி20 யுகத்தில் ரசிகர்கள் மனநிலை மாறிவிட்டதா?
Recommended Video

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில், இந்தியா 86 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்தப் போட்டியில் தோனி 59 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
முதலில் ஆடிய இங்கிலாந்து 322 ரன்கள் குவித்தது. கடினமான இலக்கை துரத்திய இந்திய அணி, 27 ஓவர்களில் நான்கு விக்கெட்கள் இழந்து 140 ரன்கள் எடுத்து இருந்தது. அடுத்த 23 ஓவர்களில், 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை. அதாவது ஓவருக்கு எட்டு ரன்கள் தேவை என்ற நிலை. இந்திய அணியின் டாப் ஆர்டரான ரோஹித் ஷர்மா, தவான், கோலி, ராகுல் அனைவரும் ஆட்டமிழந்த நிலையில் சுரேஷ் ரெய்னா களத்தில் நிற்க, தோனி அப்போது பேட்டிங் செய்ய வந்தார்.
ரெய்னா களத்தில் நிற்பதால் அவருக்கு ஆட வழிவிட்டு நிதானமாக ஆடினார். அடுத்த சில ஓவர்களில் ரெய்னாவும் வெளியேற ஹர்திக் பண்டியா களத்திற்கு வந்தார். இவர் அதிரடி பேட்ஸ்மேன் என்பதால் இவரை ஆடவிட்டு தோனி விக்கெட்டை தக்கவைப்பதில் கவனம் செலுத்தினார். அவரும் ஆட்டமிழந்த பின்னர், இந்திய அணியில் தோனி மட்டுமே ரன் குவிக்கும் திறன் பெற்றவர். மற்றவர்கள் அனைவரும் அதிக பேட்டிங் அனுபவமில்லாத பந்து வீச்சாளர்கள் மட்டுமே.

நிதானம் காட்டிய தோனி
இந்த கட்டத்தில், இந்திய அணியின் தோல்வி உறுதி ஆனது. இதன் பின்னர், தோனி அதிரடியாக ஆடுவாரா? என பலரும் எதிர்பார்த்த நிலையில், அப்போதும் அவரால் ரன் குவிக்க முடியவில்லை. இதனால் பலரும், தோனியின் நிதான ஆட்டத்தை விமர்சித்து வருகிறார்கள். ஒரு வீரர், ஒரே ஒரு ஆட்டத்தில் தன் இயல்பான ஆட்டத்தில் விளையாடா விட்டால் அது தவறா? அந்த நேரத்தில், நாளில், களத்தின் தன்மை என்ன? ஒரு இலக்கை துரத்தும் போது ஏற்படும் அழுத்தம், இவையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் விமர்சனம் செய்வது சரியல்ல.

ஏன் ரன் இல்லை
அந்த போட்டியில் குறைவான ரன் கொடுத்த பௌலர்கள், சுழல் பந்து வீச்சாளர்களே! குல்தீப் தவிர்த்து, சாஹல் ஓவருக்கு 4.3 ரன்கள் மட்டுமே கொடுத்தார். இங்கிலாந்து சார்பில், ரஷித் மற்றும் மொயின் அலி, ரன்களை வெகுவாக கட்டுப்படுத்தினர். இரண்டாவது இன்னிங்க்ஸ் ஆடும் போது பந்து அதிகம் திரும்பியதும் இந்திய பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்க முடியாமல் போனதற்கு முக்கிய காரணம். இதையெல்லாம், கருத்தில் கொள்ளாமல் தோனியை விமர்சிப்பது சரியா?

ரெய்னாவும் நிதான ஆட்டம்தான்
அதே ஆட்டத்தில் ரெய்னா 63 பந்துகளில் 46 ரன்கள் எடுத்தார். முன்னூறுக்கும் மேற்பட்ட இலக்கை துரத்தும் போது, இது கூட ஒரு வகையில் நிதான ஆட்டம்தான். ஆனால், இது யார் கண்களையும் உறுத்தவில்லை. ஏதாவது ஒரு போட்டியில் தோனி அடித்துவிட்டால் அவரை புகழ்வதும், ஒரு போட்டியில் சொதப்பி விட்டால், அவரை பற்றி மிகக் கடுமையான விமர்சனம் வருவதும் கடந்த சில வருடங்களாக அதிகரித்துள்ளது.

எப்போதும் அதிரடி சாத்தியமில்லையே
குறிப்பாக, ஐபிஎல் போன்ற டி20 தொடர்கள் வரவுக்குப் பின், உருவான புதிய கிரிக்கெட் ரசிகர்கள் ஒருநாள் போட்டிகளையும் டி20 போன்றே அதிரடியாக ஆட வேண்டும் என நினைக்கிறார்கள். அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு இந்திய பேட்ஸ்மேனின், இதே லார்ட்ஸ் மைதானத்தில் ஆடிய உலகக்கோப்பை இன்னிங்க்ஸ் உண்டு.

கட்டை ராஜா கவாஸ்கர்
1975 முதல் கிரிக்கெட் உலகக்கோப்பையில் இந்திய அணியின் "மாஸ்டர்" பேட்ஸ்மேன் சுனில் கவாஸ்கர், முதல் ஓவரில் இருந்து கடைசி ஓவரான 60வது ஓவர் வரை 174 பந்துகளை சந்தித்து களத்தில் நின்றார். அப்போது அவர் எடுத்த ரன்கள் 36. இங்கிலாந்து அடித்த 334 ரன்களை துரத்திய இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்து, 202 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. மறக்க முடியுமா அதை!


Click it and Unblock the Notifications