அதிர்வலை
தனக்கு பிடித்த வீரர் ஒருவரை அணியில் ஆட வைக்கவே தோனி அவ்வாறு செய்ததாக, தற்போது ஒரு பேட்டியில் மறைமுகமாக சுட்டிக் காட்டி இருக்கிறார் யுவராஜ் சிங். அவரது இந்த பேச்சால் அதிர்வலை உண்டாகி இருக்கிறது.
அதிரடி அரைசதங்கள்
2007 டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா கோப்பை வெல்ல உழைத்த வீரர்களில் முக்கியமானவர் யுவராஜ் சிங். குறிப்பாக, இங்கிலாந்து அணிக்கு எதிராகவும், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராகவும் அவர் அடித்த அதிரடி அரைசதங்கள் தான் இந்திய அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்து சென்றது.
காப்பாற்றிய யுவராஜ்
அதே போல, 2011 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் சில குறைகள் இருக்கத்தான் செய்தன. ஆனால், பேட்டிங்கோ, பந்துவீச்சோ.. எங்கே இந்தியா சறுக்கினாலும், அங்கே ஆபத்பாந்தவனாக வந்து அணியைக் காப்பாற்றினார் யுவராஜ் சிங்.
கலக்கிய யுவராஜ் சிங்
8 இன்னிங்க்ஸ்களில் 362 ரன்கள் எடுத்தார். அதில் நான்கு நாட் அவுட் இன்னிங்க்ஸ் அடங்கும். ஒரு சதம் மற்றும் நான்கு அரைசதம் அடித்து இருந்தார். பந்துவீச்சிலும் கலக்கி இருந்தார். 9 போட்டிகளில் 15 விக்கெட்கள் வீழ்த்தி இந்திய அணியில் ஜாகிர் கானுக்கு அடுத்து அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.
தோனி தயங்கினார்
இந்த உலகக்கோப்பை சாதனை மன்னனை உண்மையில் 2011 உலகக்கோப்பை தொடருக்கு முன் அணியில் சேர்க்கவே தயங்கி உள்ளார் அப்போதைய கேப்டன் தோனி. அதற்கு காரணம், சுரேஷ் ரெய்னா. ஆம், ரெய்னாவுக்கு வாய்ப்பு வழங்கவே, தோனி தயங்கியதாக மறைமுகமாக கூறி உள்ளார் யுவராஜ் சிங்.
ரெய்னாவுக்கு அதிக ஆதரவு
இது குறித்து யுவராஜ் சிங் கூறுகையில், "அப்போது சுரேஷ் ரெய்னாவுக்கு அதிக ஆதரவு இருந்தது. தோனி அவருக்கு ஆதரவு அளித்து வந்தார். ஒவ்வொரு கேப்டனுக்கும் பிடித்த வீரர் என ஒருவர் இருப்பார். அப்போது தோனி, ரெய்னாவை அந்த வகையில் ஆதரித்தார்" என்றார்.
அணியின் நிலை
"அப்போது யூசுப் பதான் கூட சிறப்பாக ஆடி வந்தார். நானும் சிறப்பாக ஆடி வந்தேன். நிறைய விக்கெட்கள் வீழ்த்தி வந்தேன். சுரேஷ் ரெய்னா அப்போது நல்ல பார்மில் இல்லை." என 2011 உலகக்கோப்பை தொடருக்கு முந்தைய அணி சூழல் குறித்து கூறினார் யுவராஜ்.
எப்படி தேர்வு செய்யப்பட்டார்?
"அப்போது அணியில் இடது கை சுழற் பந்துவீச்சாளர் இல்லை. அப்போது நான் நிறைய விக்கெட்கள் வீழ்த்தி வந்தேன். அதனால், அவர்களுக்கு வேறு வாய்ப்பு இல்லாமல் போனது" என்றார் யுவராஜ். வேறு வழியில்லாமல் தான் தன்னை அணியில் தேர்வு செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.
அணித் தேர்வில் குழப்பம்
2011 உலகக்கோப்பை தொடருக்கு முன் அணித் தேர்வில் குழப்பம் இருந்தது. சுரேஷ் ரெய்னா, யூசுப் பதான் மற்றும் யுவராஜ் சிங் மூவரையும் அணியில் தேர்வு செய்து இருந்தார் தோனி. மேலும், அந்த தொடரில் தோனியும் பேட்டிங்கில் மிக சுமாராகவே ஆடி வந்தார். இறுதிப் போட்டியில் தான் அவர் தன் பார்மை மீட்டார்.
நாயகன் யுவராஜ் சிங்
வேறு வழியில்லாமல் அணியில் தேர்வு செய்யப்பட்ட யுவராஜ் சிங் தான் 2007 உலகக்கோப்பை தொடரைப் போலவே, 2011 உலகக்கோப்பை தொடரிலும் பல முக்கிய வெற்றிகளை பெற்றுத் தந்து உலகக்கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.