கேப்டன்சி பிரச்சினை
இந்திய அணியில் வீரர்களின் பணிச்சுமையை குறைப்பதற்காக ஸ்பிலிட் கேப்டன்சி முறையை அமல்படுத்தவுள்ளதாக தகவல் வெளியானது. அதற்கேற்றார் போல தான் தற்போது ஹர்திக் பாண்ட்யா டி20 அணியை கையாண்டு வருகிறார். ஆனால் இது அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை. டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை மனதில் வைத்து ரோகித்திற்கு ஓய்வு தந்து வருவதாக பிசிசிஐ விளக்கம் தந்துள்ளது.
தினேஷ் கார்த்திக் கருத்து
இந்நிலையில் இதுகுறித்து தினேஷ் கார்த்திக் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில், இந்தியாவின் ஸ்பிலிட் கேப்டன்சி பற்றி தற்போதே முடிவெடுக்க கூடாது. 2023 உலகக்கோப்பைக்கு முன் 3 டி20 தொடர்கள் மட்டுமே உள்ளன. 2 முடிவடைந்த சூழலில் ஐபிஎல்-க்கு பிறகு வெஸ்ட் இண்டீஸ் தொடர் உள்ளது. எனவே உலகக்கோப்பை தொடர் முடிந்த பிறகு பிசிசிஐ-ன் திட்டங்கள் தெளிவாக தெரியவரும்.
சாதித்தே தீர வேண்டும்
உலகக்கோப்பையில் ரோகித் சர்மாவால் ஸ்பெஷலாக எதுவும் செய்ய முடியவில்லை என்றால் நிச்சயம் ஸ்பிலிட் கேப்டன்சி செயல்படுத்தப்படும். ரோகித் விருப்பப்பட்டால் 2024 டி20 உலகக்கோப்பையை விளையாட வேண்டும் என நாம் நினைக்கிறோம். ஆனால் இந்தாண்டு அவர் ஏதாவது செய்தால் மட்டுமே அதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதனை மனதில் வைத்து அவர் சாதித்து காட்ட வேண்டும் என தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.
கடைசி போட்டி
நியூசிலாந்துடனான கிரிக்கெட் தொடரை முடித்துவிட்டால் இந்திய அணிக்கு ஜூன் மாதம் வரை எந்தவித வெள்ளைப்பந்து கிரிக்கெட்டும் கிடையாது. நியூசிலாந்து தொடர் முடிந்ததும் ஆஸ்திரேலியாவுடன் டெஸ்ட் போட்டிகள் உள்ளன. அதன் பின்னர் ஏப்ரல் 1ம் தேதி தொடங்கும் ஐபிஎல் தொடர் மே கடைசி வரை நடைபெறும். இதனை தொடர்ந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி உள்ளது. எனவே இனி அனைவரின் கவனமும் 50 ஓவர் உலகக்கோப்பை மீது தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.