அடிக்க வேண்டிய நேரத்துல டொக்... இவங்கள என்ன சொல்றது? தோனி, கேதாரை கழுவி ஊத்திய முன்னாள் கேப்டன்
எட்ஜ்பாஸ்டன்: தோனி, கேதர் ஜாதவ் பேட்டிங் குறித்து என்ன பேசுவது என்றே தெரிய வில்லை என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி புலம்பி தள்ளியிருக்கிறார்.
உலக கோப்பையில் இந்திய அணி சிறப்பாக விளையாடி முதல் 5 போட்டிகளிலும் தோல்வியை சந்திக்காமல் வென்றது. ஆனால், இங்கிலாந்துக்கு எதிரான நேற்றைய போட்டியில் தன்னுடைய முதல் தோல்வியை இந்தியா பதிவு செய்தது.
முதலில் விளையாடிய ஜேசன் ராய் அதிரடி, பெயர்ஸ்டோவ் சதம் ஆகியவற்றால் இங்கிலாந்து 337 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய இந்திய அணி 306 ரன்கள் மட்டுமே எடுத்து 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

2 முக்கிய காரணங்கள்
இந்நிலையில், இந்திய அணியின் தோல்விக்கு 2 முக்கிய காரணங்கள் உள்ளன என்று சவுரவ் கங்குலி கூறியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது: இந்தியா தோற்றதற்கு 2 முக்கிய காரணங்கள் இருக்கின்றன. முதல் 10 ஓவர் மற்றும் கடைசி 5 ஓவர்கள் தான்.

சொதப்பிய பவர் பிளே
338 ரன்கள் என்பது கடின இலக்கு. அந்த இலக்கை நோக்கி முன்னேறும் போது, பவர் பிளேவில் எடுத்தது வெறும் 28 ரன்கள். இது போதவே போதாது. கோலி, ரோகித் ஜோடி இன்னும் கொஞ்சம் அதிரடியாக அடித்து விளையாடி இருக்க வேண்டும்.

சிங்கிள் ரன்கள்
அதேபோல், ஓவருக்கு 13 ரன்களுக்கு மேல் தேவை என்று இருந்தது. அப்போதும் கூட ஆட்டத்தின் சூழ்நிலையை பற்றி உணர்ந்து கொள்ளாமல், தோனி, கேதர் ஜாதவ் ஜோடி சிங்கிள் ரன்களில் தான் அதிக கவனம் செலுத்தினர். இவர்களின் பேட்டிங் பற்றி என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

ஆச்சரியமாக உள்ளது
டெத் ஓவர்களில் சிங்கிள் எடுத்திருக்கின்றனர். என்ன சொல்வது? 5 விக்கெட்டுகளை கையில் உள்ளன. 338 ரன்கள் என்ற இலக்கை கடைசி ஒவர்களில் அடித்து ஆடி ஜெயிக்க முடியவில்லை என்பது ஆச்சர்யம் தருகிறது. பவுலிங் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.

டொக் பந்துகள்
அதை பவுண்டரிக்கு விரட்டி, ரன்களை ஸ்கோர்போர்டில் வரும் வழியை தான் பார்க்க வேண்டும். பெரிய இலக்கை விரட்ட வேண்டிய தருணத்தில், டாட் பந்துகள். அவர்களின் ஆட்டத்தை பற்றி எப்படி விமர்சிப்பது என்றே எனக்கு தெரிய வில்லை என்றார்.


Click it and Unblock the Notifications