கிளென் மேக்ஸ்வெல் பேட்டி
இதுதொடர்பாக வீடியோ பேட்டி ஒன்றில் அவர் கலந்து கொண்டு பேசும்போது கூறியதாவது: 2019 உலகக் கோப்பைத் தொடரின் போது நான் மிகுந்த மன நெருக்கடிக்குள்ளானேன். இதிலிருந்து வெளியே வர எனக்கு பிரேக் தேவைப்பட்டது. பிரேக் எடுப்பதற்காக எனது கையைக் கூட உடைத்துக் கொள்ளலாமா என்று யோசித்தேன். அந்த அளவுக்கு பதட்டத்தில், அழுத்தத்தில் இருந்தேன் என்று கூறியுள்ளார்.
மன அழுத்தத்தில் சிக்கிய மேக்ஸ்வெல்
இந்த நிலையில்தான் கடந்த ஆண்டு ஆஸ்திரேலியா - இலங்கை தொடரில் தான் கலந்து கொள்ளாமல் பிரேக் எடுத்துக் கொண்டதாகவும் மன அழுத்தமே இதில் கலந்து கொள்ள விடாமல் தன்னை முடக்கியதாகவும் அவர் கூறியுள்ளார். கடந்த ஜூலையில் நடந்த ஆஸ்திரேலியா தென் ஆப்பிரிக்க போட்டியின்போது கூட தானும், ஷான் மார்ஷும் பயிற்சியின்போது ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கை உடைஞ்சா நல்லாருக்குமே
மார்ஷ் அப்போது ஏதோ பிரச்சினையில் இருந்ததை நான் அறிந்தேன். அவருக்காக நான் வருத்தப்பட்டேன். பின்னர் இருவருமே மருத்துவமனைக்கு சென்றோம். அந்த சமயத்தில் எனது கை உடைந்து போயிருந்தால் நல்லா இருக்குமே.. இதை வைத்து பிரேக் எடுக்கலாமே என்று கூட நான் யோசித்தேன். அந்த அளவுக்கு என் மீதே எனக்கு கோபமாக இருந்தது. மற்றவர்கள் மீது எனக்கு கோபமாக இருந்தது. உலகக் கோப்பையில் சரியாக ஆட முடியவில்லையே என்ற கோபம்தான் அது என்று அவர் கூறியுள்ளார்.
கை கொடுத்த வினி
ஒரு கட்டத்தில் அணியிலிருந்து என்னை நீக்கி விடுவார்கள் என்று முடிவு கட்டினேன். அதுவும் எனக்குள் நெருக்கடியைக் கொடுத்தது. அந்த சமயத்தில்தான் வினி ராமன் எனக்கு கைக்கொடுத்தார். ( இவரைத்தான் திருமணம் செய்கிறார் மேக்ஸ்வெல்). எனது மனநல பிரச்சினையிலிருந்து வெளிவர அவர்தான் உதவினார். எனது விளையாட்டையும், எனது பிரச்சினையயும் கூர்ந்து கவனித்து வந்தவர் அவர். மார்ஷ் கோப்பையின்போதுதான் நான் நானாக இல்லை என்பதை எனக்கு சுட்டிக் காட்டினார் என்பதையும் மேக்ஸ்வெல் சுட்டிக்காட்டியுள்ளார்.
மனசுக்குள் ஏகப்பட்ட சிந்தனைகள்
அப்போது எனது மனதுக்குள் என்னென்னவோ ஓடிக் கொண்டிருந்தது. நிறைய சிந்தித்தேன். நிறைய சமைத்தேன். என்னை எப்படி சரியாக்குவது என்று வினி திட்டமிட்டார். அவருக்கு எப்படி என்னை சரி செய்ய வேண்டும் என்று தெரிந்திருந்தது. இருவரும் மெல்போர்ன் திரும்பியபோது நான் முழு எனர்ஜியுடன் இல்லை. மகிழ்ச்சியாகவும் இல்லை. நான் சோர்வாக இருக்கிறேன் என்று நினைத்துக் கொண்டேன். அதன் பிறகுதான் மெல்ல மெல்ல சகஜ நிலைக்குத் திரும்பினேன் என்று கூறியுள்ளார் மேக்ஸ்வெல்
மீண்டும் வந்த மேக்ஸ்வெல்
தற்போது மேக்ஸ்வெல் மீண்டும் பார்முக்குத் திரும்பி விட்டார். 2019-20 பிபிஎல் தொடரில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக ஆடிய அவர் 398 ரன்களைக் குவித்து தனது வருகையை அறிவித்துள்ளார். கடந்த மாதம்தான் வினி ராமனுக்கும், மேக்ஸ்வெல்லுக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. ஐபிஎல் தொடர்களில் எப்போதுமே மேக்ஸ்வெல் அதிரடி காட்டுவது வழக்கம். இந்த முறையும் அதற்காக ரசிகர்கள் காத்துள்ளனர். மேக்வெல்லும் தான் சரியாகி விட்டதாக கூறியுள்ளதால் பட்டாசு காதைக் கிழிக்கும் என எதிர்பார்க்கலாம்.