பெண்களை இழிவுபடுத்தும் பேச்சு
காபி வித் கரன் நிகழ்ச்சியில் பிரபல பாலிவுட் இயக்குனர் கரன் ஜோகர் கேட்கும் கேள்விகளுக்கு பண்டியா மற்றும் ராகுல் பதில் அளித்தனர். அந்த கேள்வி பதில்களில் பண்டியா கூறிய சில விஷயங்கள் பெண்களை இழிவுபடுத்துவது போலவும், காம நெடி கலந்தும் இருந்தது.
பண்டியா சர்ச்சை பேச்சு
இந்திய கலாச்சாரத்துக்கு சற்றும் ஒத்து வராத சில விஷயங்களை பண்டியா பேசினார். குறிப்பாக தான் பல பெண்களுடன் பழகியதாகவும், ஜாலியாக இருந்ததாகவும், அதை தன் பெற்றோரிடம் சாதாரணமாக பகிர்ந்து கொள்வேன் எனவும் கூறினார்.
கடும் எதிர்ப்பு
பண்டியாவின் கருத்துக்களுக்கு இணையத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. ராகுல், பண்டியா அளவுக்கு பேசவில்லை என்றாலும், சில மேற்கத்திய கலாசார விஷயங்களை பேசினார். அது பொதுவானவை என்றாலும், பண்டியா பேச்சால் ராகுலும் சிக்கலில் மாட்டிக் கொண்டார்.
நோட்டீஸ் அளித்த பிசிசிஐ
அதையடுத்து பிசிசிஐ இருவருக்கும் 24 மணி நேரத்தில் இந்த சர்ச்சை பேச்சுக்கள் பற்றி பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அளித்தது. இன்று நடந்த விசாரணைக்கு பின், நிர்வாக கமிட்டி தலைவர் வினோத் ராய் பண்டியா கூறிய விளக்கம் திருப்தியாக இல்லை. அதை ஏற்க முடியாது என கூறினார்.
பண்டியா மற்றும் ராகுலுக்கு இரண்டு போட்டிகள் வரை ஆட தடை விதிக்கலாம் என தான் பரிந்துரைப்பதாக கூறினார்.
சட்ட ரீதியான அணுகுமுறை
இந்த விஷயத்தில் மற்றொரு நிர்வாக கமிட்டி உறுப்பினர் டயானா எடுல்ஜி சட்ட ரீதியான கருத்தை கேட்டுள்ளதாகவும், அது வரை ராகுல் மற்றும் பண்டியாவுக்கு தடை விதிக்கப்படாது எனவும் கூறப்படுகிறது.
பண்டியா மன்னிப்பு
இந்த விவகாரத்தில் ஹர்திக் பண்டியா ஏற்கனவே சமூக வலைதளங்களில் மன்னிப்பு கோரி உள்ளார். தான் அந்த நிகழ்ச்சியின் தன்மையால் கொஞ்சம் அதிகப்படியாக ஈர்க்கப்பட்டு பேசி விட்டதாகவும், யார் மனமாவது புண்பட்டு இருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் கூறி இருந்தார்.
விளக்கம் அளிக்கவில்லை
ஆனால், மற்றொரு வீரரான ராகுல் இது வரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. ராகுல் மீது ஏற்கனவே சரியாக ரன் குவிக்காமல் அணியில் இடம் பிடித்து வருகிறார். பயிற்சியாளர் மற்றும் கேப்டனின் செல்லப் பிள்ளை என்ற விமர்சனம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலிய தொடரில் தடை?
ஒரு வேளை இரண்டு போட்டிகள் தடை விதிக்கப்பட்டால் இருவரும் ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் இரண்டு போட்டிகளில் ஆட முடியாத நிலை ஏற்படும். ராகுலை பொறுத்தவரை அணியில் இடம் கிடைப்பதே சிரமம் என்ற நிலையில் இந்த விவகாரமும் சேர்ந்து கொண்டுள்ளது.