என்ன நடந்தது?
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி வீரர்கள் டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகின்றனர். மூன்றாவது டெஸ்ட் ஜனவரி 7 அன்று துவங்க உள்ள நிலையில், இந்திய வீரர்கள் மெல்போர்னில் தங்கி பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ரசிகர் பதிவிட்ட வீடியோ
புத்தாண்டு அன்று ஐந்து இந்திய வீரர்கள் அருகே இருந்த உணவகம் ஒன்றிற்கு சென்றுள்ளனர். அந்த ஐந்து வீரர்கள் ரோஹித் சர்மா, ரிஷப் பண்ட், நவ்தீப் சைனி, ஷுப்மன் கில், ப்ரித்வி ஷா என கூறப்படுகிறது. அவர்கள் அங்கே சென்றதை ஒரு ரசிகர் வீடியோ எடுத்து பதிவிட்டார்.
பண்ட் கட்டிப் பிடித்தாரா?
அத்துடன் தான் அவர்களின் பில்லை செலுத்தியதாகவும், இந்திய வீரர்கள் தனக்கு நன்றி கூறியதாகவும். ரிஷப் பண்ட் தன்னை கட்டி அணைத்து பின் புகைப்படம் எடுத்ததாகவும் அவர் கூறி உள்ளார். இது தான் பெரிய சர்ச்சையாக வெடித்தது. பாதுகாப்பு வளையத்தில் இருக்கும் இந்திய வீரர்கள் ரசிகர்களுடன் செல்பி எடுக்கவோ, அருகில் செல்லவோ அனுமதி இல்லை.
ஆஸ்திரேலிய ஊடகங்கள்
அந்த ரசிகரின் பதிவு வைரல் ஆனது. இதை அடுத்து ஆஸ்திரேலிய ஊடகங்கள் இந்திய வீரர்கள் விதிமுறைகளை காற்றில் பறக்க விட்டதாக கூறி சர்ச்சையை கிளப்பின. இதை அடுத்து இதில் பிசிசிஐ, கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்புகள் தலையிட்டன.
விசாரணை
இரு அமைப்புகளும் இது குறித்து விசாரணை செய்து வருவதாக கூறப்படுகிறது. ஒருவேளை இந்திய வீரர்கள் விதிமுறையை மீறி இருந்தால் அவர்கள் அடுத்த இரு டெஸ்ட் போட்டிகளில் ஆடுவதில் சிக்கல் ஏற்படும். இது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு ஆகும்.
விதிமீறல் உண்மையா?
உண்மையிலேயே ரிஷப் பண்ட் கட்டிப் பிடித்தாரா? செல்பி எடுத்தாரா? இது பற்றி அந்த ரசிகரே மறுத்துள்ளார். தான் உணர்ச்சிவசப்பட்டு அவ்வாறு கூறியதாகவும், பண்ட் தன் அருகே வரவில்லை என்றும் அவர் பின்னர் கூறி இருக்கிறார். அந்த ரசிகர் சொல்வதில் எதை நம்புவது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.
தனிமை
இதற்கிடையே முன்னெச்சரிக்கையாக உணவகம் சென்ற ஐந்து இந்திய வீரர்களை தனிமைப்படுத்தி உள்ளது பிசிசிஐ. அவர்கள் பயிற்சியில் கலந்து கொள்ளலாம். ஆனால், மற்ற வீரர்களுடன் இணைந்து பயிற்சி செய்ய முடியாது. இப்படி ஒரு சிக்கலில் ரோஹித் சர்மாவும் சிக்கி இருப்பது அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.