
காற்று மாசு
இந்திய தலைநகர் டெல்லியில் தீபாவளி கொண்டாட்டங்கள் காரணமாக அதிக அளவில் காற்று மாசு ஏற்படும். இது வருடா வருடம் ஏற்படும் நிகழ்வு தான். கடந்த சில ஆண்டுகளாக இது பெரிய அபாயத்தை உண்டாக்கி வருகிறது.

அபாய அளவு
காற்றின் தரம் குறித்த அளவீட்டின் படி 301 முதல் 400 வரை இருந்தால் அது மிக மோசமான காற்று மாசாக கருதப்படும். இந்த நிலையில், டெல்லியின் காற்று மாசு அளவு 350-ஐ ஒட்டி உள்ளது.

கிரிக்கெட் போட்டி சிக்கல்
இந்த நிலையில், டெல்லியில் முதல் டி20 போட்டி நடைபெற உள்ளது. இது வீரர்கள் மட்டுமின்றி, போட்டியை காண வரும் ஆயிரக்கணக்கான ரசிகர்களையும் கடுமையாக பாதிக்கும் என சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.

கண் எரிச்சல்
தற்போது டெல்லியில் நிலவும் சூழ்நிலைப் படி வெளியே வந்தால் கண் எரிச்சல் ஏற்படுவதாக டெல்லி மாநில கிரிக்கெட் அமைப்பு அதிகாரி ஒருவரே கூறி இருக்கிறார். போட்டி நடக்க இன்னும் ஐந்து நாட்கள் உள்ள நிலையில் இந்த நிலை இருக்கிறது.

சுவாசக் கோளாறுக்கு வாய்ப்பு
மேலும், மிக மோசமான காற்று மாசு காரணமாக சுவாசக் கோளாறுகள் ஏற்படலாம் என கூறப்படுகிறது. சிலருக்கு ஒவ்வாமை ஏற்பட்டு வாந்தி, தலைசுற்றல் போன்ற உடல் உபாதைகளும் ஏற்படலாம்.

இலங்கை வீரர்கள் நிலை
2017 ஆம் ஆண்டு தீபாவளியை ஒட்டி நடந்த டெஸ்ட் போட்டியின் போது இலங்கை அணி வீரர்கள் முகத்தில் மாஸ்க் அணிந்து, விளையாடியது அப்போது அதிர்வை ஏற்படுத்தியது.

பயிற்சி நடக்குமா?
அது போன்ற நிலை இப்போதும் ஏற்படலாம் என கருதப்படுகிறது. இந்தியா - வங்கதேசம் மோத உள்ள முதல் டி20 போட்டிக்கு முன்னதாக இரு அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபடுவதே சந்தேகமாக மாறி இருக்கிறது.

இந்திய அணி பயிற்சி
இந்திய அணி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை அன்று வலைப் பயிற்சியில் ஈடுபட வேண்டும். ஆனால், அன்று இந்திய அணி வெயில் வந்தால் மட்டுமே காற்று மாசு குறைவாக இருக்கும் என்பதால் வெளியே வருவார்கள். அப்படி இல்லையென்றால், உள்அரங்கிலேயே பயிற்சி செய்வார்கள் என கூறப்படுகிறது. இது இந்திய வீரர்களும் டெல்லி காற்று மாசு குறித்து பயத்தில் இருப்பதையே காட்டுகிறது.

வங்கதேச அணியின் நிலை
வங்கதேச வீரர்களும் இரு நாட்கள் பயிற்சி மேற்கொள்ள உள்ளனர். அவர்களுக்கு இந்த சூழ்நிலை புதிதாக இருக்கும் என்பதால் அவர்கள் என்ன முடிவு எடுக்கப் போகிறார்கள் என்பது தெரியவில்லை.

போட்டி நடக்கும்
காற்று மாசு பிரச்சனை இருந்தாலும், முதல் டி20 போட்டி திட்டமிட்டபடி நடக்கும் என பிசிசிஐ வட்டாரம் கூறி இருக்கிறது. போட்டி இரவு நேரத்தில் சுமார் 3 முதல் 4 மணி நேரம் வரையே நடைபெறும் என்பதால் பெரிய சிக்கல் இருக்காது என உறுதியாக உள்ளது பிசிசிஐ.


Click it and Unblock the Notifications