இந்தியா வெற்றி
இந்தியா - நியூசிலாந்து இடையே ஆன ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி 5 - 0 என்ற அளவில் தொடரைக் கைப்பற்றியது. இந்த தொடரின் கடைசி போட்டி ஞாயிறு அன்று நியூசிலாந்து நாட்டின் பே ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.
போட்டியில் என்ன நடந்தது?
ஐந்தாவது போட்டியில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி இல்லாமல் களமிறங்கியது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 3 விக்கெட்கள் இழப்பிற்கு 163 ரன்கள் குவித்தது. இது குறைந்த ஸ்கோராக கருதப்பட்டது. எனினும், இந்திய அணி பந்துவீச்சில் அசத்தி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியின் இடையே அந்த சம்பவம் நடந்தது.
ஆட்டோகிராப் வாங்க முயற்சி
போட்டி நியூசிலாந்து நேரப்படி இரவு 8 மணிக்கு துவங்கிய நிலையில், சுமார் 10.20 மணி அளவில் இரு இந்திய ரசிகர்கள் பாதுகாவலர்களை மீறி, ஒரு வர்ணனையாளரிடம் ஆட்டோகிராப் வாங்க முயற்சி செய்துள்ளனர். ஆனால், அந்த வர்ணனையாளர் ஆட்டோகிராப் போட மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
முன்னாள் வீரர்?
முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மட்டுமே இந்தியா - நியூசிலாந்து தொடரில் வர்ணனை செய்து வரும் நிலையில், எந்த முன்னாள் வீரரிடம் அந்த ரசிகர் ஆட்டோகிராப் வாங்க முயன்றார் என்ற தகவல் வெளியாகவில்லை. அந்த முன்னாள் வீரர் ஆட்டோகிராப் போட மறுத்தவுடன் அந்த ரசிகர்கள் கடுமையாக திட்டத் துவங்கி உள்ளனர்.
மீண்டும் உள்ளே வந்தார்
பின் அந்த முன்னாள் வீரரின் புகாரின் பேரில் பாதுகாவலர்கள் அந்த ரசிகர்களை மைதானத்தை விட்டு வெளியேற்றி உள்ளனர். எனினும், அந்த இருவரில் 24 வயது மதிக்கத்தக்க ரசிகர் மீண்டும் மைதானத்துக்குள் நுழைந்து, அந்த முன்னாள் வீரரை மீண்டும் திட்டி உள்ளார்.
கசிந்த செய்தி
பத்திரிக்கையாளர்கள் அறைக்கு அருகே நடந்த இந்த சம்பவம் குறித்த செய்தி நியூசிலாந்து பத்திரிக்கைகளில் கசிந்துள்ளது. அந்த ரசிகர் மிக சத்தமாக, மோசமான வார்த்தைகளால் அந்த முன்னாள் வீரரை திட்டியதாகவும், பின் காவல்துறை அந்த ரசிகரை கைது செய்ததாகவும் அந்த செய்திகளில் கூறப்பட்டுள்ளது.
தடை
அந்த ரசிகர் இந்த கிரிக்கெட் சீசன் முழுவதும் மீண்டும் ஆடுகளத்துக்குள் நுழைய தடை விதித்துள்ளது நியூசிலாந்து கிரிக்கெட் அமைப்பு. முன்பு நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரிலும் ஒரு ரசிகருக்கு தடை விதித்து இருந்தது நியூசிலாந்து கிரிக்கெட்.
இன ரீதியான சீண்டல்
அப்போது இங்கிலாந்து வீரர் ஜோப்ரா ஆர்ச்சரை இன ரீதியாக ஒருவர் திட்டினார். அது குறித்து ஆர்ச்சர் புகார் அளித்ததால், அது பெரிய பிரச்சனையாக வெடித்தது. நியூசிலாந்து கிரிக்கெட் அமைப்பு அந்த ரசிகரை அடையாளம் கண்டு அவருக்கு தடை விதித்தது.
12 ரசிகர்கள் வெளியேற்றம்
இந்த இந்திய ரசிகர் இன ரீதியாக தாக்கிப் பேசவில்லை எனவும், மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி திட்டி இருக்கிறார் என்பதை மட்டும் நியூசிலாந்து கிரிக்கெட் உறுதி செய்துள்ளது. அதே ஐந்தாவது போட்டியில் மட்டும் 12 ரசிகர்கள் மோசமான செயல்பாடுகளால் மைதானத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
ரசிகர்கள் தொல்லை
நியூசிலாந்து கிரிக்கெட் நிர்வாகம், இந்திய அணிக்கு எதிரான இந்த தொடரில் பெரிய அளவில் வருமானம் ஈட்டினாலும், இந்திய ரசிகர்கள் சிலரின் தொல்லையை சந்திக்க வேண்டி உள்ளது. நான்காவது போட்டியின் இடையே விராட் கோலி ரசிகர்கள் அத்துமீறி மைதானத்துக்குள் நுழைந்தனர். அதைத் தொடர்ந்து இந்த சம்பவம் நடந்துள்ளது.