நிச்சயம் ஆட மாட்டார்
ஒருவேளை இஷாந்த் சர்மா இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வலியை சமாளித்து ஆடினாலும், பாதி போட்டியில் அவர் வெளியேறினால் அது இந்திய அணிக்கு இன்னும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அதனால், அவரை அணியில் இருந்து நீக்குவதை தவிர இந்திய அணிக்கு வேறு வழி இல்லை என கூறப்படுகிறது.
இஷாந்த் சர்மா காயம்
இஷாந்த் சர்மா கடந்த ஜனவரி மாதம் ரஞ்சி ட்ராபி தொடரில் ஆடிய போது வலது காலில் உள்காயம் அடைந்தார். அதன் காரணமாக தீவிர சிகிச்சை மற்றும் பயிற்சி செய்த அவர், அதில் இருந்து விரைவில் மீண்டார். ஆறு வாரம் ஓய்வு தேவை என கூறப்பட்ட நிலையில், மூன்று வாரத்தில் அவர் தேறினார்.
போட்டியில் பங்கேற்றார்
நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன் இரு நாட்களுக்கு முன் அவர் இந்திய அணியில் இணைந்தார். முதல் டெஸ்ட் போட்டியிலும் பங்கேற்றார். அந்தப் போட்டியில் இந்திய அணி மோசமாக ஆடி தோற்றது. எனினும், அந்தப் போட்டியில் இந்திய அணிக்கு நம்பிக்கை அளித்த ஒரே வீரர் இஷாந்த் சர்மா தான்.
சிறப்பாக செயல்பட்ட ஒரே வீரர்
முதல் டெஸ்ட் போட்டியில் பும்ரா, ஷமி இருவரும் விக்கெட் வீழ்த்த திணறிய நிலையில், இஷாந்த் சர்மா சிறப்பாக பந்து வீசி நியூசிலாந்து வீரர்களை அச்சுறுத்தினார். 68 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்கள் வீழ்த்தினார். அந்தப் போட்டியில் சிறப்பாக ஆடிய ஒரே இந்திய வீரர் இஷாந்த் சர்மா தான்.
மீண்டும் வலி
இந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற அவர் அவசியம் என்ற நிலையில் பயிற்சி செய்யத் துவங்கினார். 20 நிமிடம் வலைப் பயிற்சியில் பந்து வீசிய பின் அவர் தன் வலது காலில் மீண்டும் வலி ஏற்பட்டு உள்ளதாக கூறினார்.
மருத்துவ பரிசோதனை
இதையடுத்து அவரை ஓய்வில் வைத்துள்ளது இந்திய அணி நிர்வாகம். அவரது நிலை குறித்து மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு முடிவுக்காக காத்துக் கொண்டுள்ளனர். முடிவு எப்படி இருந்தாலும், அவரை இரண்டாம் போட்டியில் ஆட வைப்பது பாதிப்பை ஏற்படுத்தலாம் என்பதால் அவரை நீக்கும் முடிவுக்கு நிர்வாகம் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
மாற்று வீரர் யார்?
மாற்று வேகப் பந்துவீச்சாளர்களாக இந்திய அணியில் உமேஷ் யாதவ் மற்றும் நவ்தீப் சைனி உள்ளனர். நவ்தீப் சைனி அனுபவம் இல்லாத பந்துவீச்சாளர். உமேஷ் யாதவ் இந்திய மண்ணில் சிறப்பாக பந்து வீசினாலும், வெளிநாட்டு மண்ணில் தடுமாறுவார்.
கடும் குழப்பம்
நவ்தீப் சைனி, உமேஷ் யாதவ் இருவரில் யாரை தேர்வு செய்வது என இந்திய அணி குழப்பத்தில் உள்ளது. அனுபவ அடிப்படையில் உமேஷ் யாதவ்வுக்கே அணியில் வாய்ப்பு கிடைக்கும். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பந்துவீச்சில் இந்தியா என்ன செய்யப் போகிறது? என்ற கவலை அதிகரித்துள்ளது.
ரசிகர்கள் அதிர்ச்சி
முதல் டெஸ்டில் இந்திய அணியின் படு தோல்வியால் சோர்ந்து இருந்த ரசிகர்கள், அந்தப் போட்டியில் சிறப்பாக ஆடிய ஒரே வீரரும், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இல்லை என்பதை அறிந்து அதிர்ச்சியில் உள்ளனர். இரண்டாவது போட்டியில் தோல்வி அடைந்தால் இந்திய அணி தொடரை 0 - 2 என இழக்க நேரிடும்.