டெஸ்ட் தொடர் வெற்றி
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையே ஆன மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது இந்திய அணி.
மூன்றாவது டெஸ்ட் முக்கியம்
தொடரைக் கைப்பற்றினாலும் மூன்றாவது டெஸ்ட் போட்டியும் முக்கியம் என்று கருதி தீவிரமாக திட்டம் தீட்டியது இந்தியா. டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் ஒவ்வொரு டெஸ்ட் போட்டிக்கும் புள்ளிகள் கிடைக்கும் என்பதால் அதற்கு குறி வைத்தது இந்தியா.
பிட்ச் எப்படி?
முதல் இரண்டு போட்டிகள் நடைபெற்ற ஆடுகளங்கள் சுழற் பந்துவீச்சுக்கு அதிகம் ஒத்துழைக்காத ஆடுகளங்கள். ஆனால், மூன்றாவது டெஸ்ட் நடைபெறும் ராஞ்சி ஆடுகளம் சுழற் பந்துவீச்சுக்கு அதிகம் சாதகமாக இருக்கும் என கருதப்பட்டது.
இந்தியா திட்டம்
ஆடுகளத்தில் அதிக வெடிப்புகள் இருந்ததால் சுழற் பந்துவீச்சில் பேட்டிங் செய்ய நிச்சயம் கடினமாக இருக்கும் என்ற நிலையில், கேப்டன் கோலி மூன்றாவது சுழற் பந்துவீச்சாளரை களமிறக்க திட்டமிட்டார்.
ஷாபாஸ் நதீம் அறிமுகம்
30 வயதான ஷாபாஸ் நதீம் அதிரடியாக அணியில் சேர்க்கப்பட்டு டெஸ்ட் போட்டியில் அறிமுகம் செய்யப்பட்டார். முன்னதாக குல்தீப் யாதவ் காயத்தால் அணியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஷாபாஸ் நதீம் செயல்பாடு
ஷாபாஸ் நதீம் நீண்ட காலமாக உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடி வரும் வீரர். 110 முதல்தர போட்டிகளில் 424 விக்கெட்கள் வீழ்த்தி உள்ளார் அவர். எனினும், இந்திய அணியில் இடம் கிடைக்காமல் இருந்து வந்தது. தற்போது கோலியின் அதிரடி திட்டத்தால் அணியில் வாய்ப்பு பெற்றார்.
மூத்த வீரர் நீக்கம்
ஷாபாஸ் நதீமுக்கு அணியில் இடம் அளிக்க வேண்டி அணியில் மூத்த வீரராக இருக்கும் இஷாந்த் சர்மா நீக்கப்பட்டார். அவர் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பெரிய அளவில் விக்கெட் வீழ்த்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பந்துவீச்சு கூட்டணி
மூன்றாவது டெஸ்டில் இந்திய அணி ஐந்து பந்துவீச்சாளர்களை களமிறக்குகிறது, இரண்டு வேகம் + மூன்று சுழல் என்ற திட்டத்தை செயல்படுத்தி இருக்கிறார் கோலி. உமேஷ் யாதவ், ஷமி வேகப்பந்துவீச்சை கவனித்துக் கொள்ள, அஸ்வின், ஜடேஜா, ஷாபாஸ் நதீம் சுழற் பந்துவீச்சால் தென்னாப்பிரிக்க அணியை திணறடிக்க இருக்கிறார்கள்.
தென்னாப்பிரிக்கா திட்டம்
தென்னாப்பிரிக்க அணி மூன்று வேகப் பந்துவீச்சாளர்கள், இரண்டு சுழற் பந்துவீச்சாளர்கள் என்ற திட்டத்தோடு களமிறங்கியது. ஜார்ஜ் லிண்டே அறிமுகம் ஆனார்.
இந்தியா டாஸ் வெற்றி
மூன்றாவது டெஸ்டில் இந்தியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. தொடர்ந்து மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் தென்னாப்பிரிக்கா டாஸில் தோல்வி அடைந்து பின்னடைவை சந்தித்துள்ளது.