சர்வதேச ஒருநாள் போட்டிகள்
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி முதலில் விளையாடிய சர்வதேச டி20 தொடரில் வெற்றி கொண்டுள்ள நிலையில், தற்போது ஆடிவரும் சர்வதேச ஒருநாள் தொடரில் 3க்கு 2 என்ற கணக்கில் தோல்வியடைந்துள்ளது. இந்நிலையில் மவுண்ட் மாங்கானுய்யில் நாளை விளையாடவுள்ள 3வது மற்றும் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று ஆறுதல் வெற்றியை அடைய தீவிர முனைப்பு காட்டி வருகிறது.
5க்கு 5 போட்டிகளில் வெற்றி
முன்னதாக நியூசிலாந்து அணியுடன் விளையாடிய 5 போட்டிகள் கொண்ட சர்வதேச டி20 தொடர் ஆக்லாந்து, ஹாமில்டன் மற்றும் மவுண்ட் மாங்கானுய் போன்ற இடங்களில் நடைபெற்ற நிலையில், இந்த தொடரின் 5 போட்டிகளிலும் வெற்றி பெற்று, இதுவரை இல்லாத அளவில் இந்திய அணி சாதனை வெற்றி பெற்றது. இதன்மூலம் அடுத்தடுத்த தொடர்களிலும் வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கையை ரசிகர்களிடம் ஏற்படுத்தினர்.
3க்கு 2ல் நியூசிலாந்து வெற்றி
இந்நிலையில் நியுசிலாந்து அணியுடன் மோதிய இரண்டாவது சர்வதேச ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் நியூசிலாந்து வெற்றி பெற்றுள்ளது. காயம் காரணமாக அந்த அணியின் கேப்டன் முதல் இரண்டு போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், அவருக்கு இந்த வெற்றியை நியூசிலாந்து அணி வீரர்கள் பரிசளித்துள்ளனர்.
நாளை நடைபெறுகிறது
இந்நிலையில் சர்வதேச ஒருநாள் தொடரின் 3வது மற்றும் இறுதிப் போட்டி மவுண்ட் மாங்கானுய்யில் நாளை நடைபெறுகிறது. இதில் ஆறுதல் வெற்றியை பெற இந்திய அணியும், இந்தியாவை ஒயிட்வாஷ் செய்ய நியூசிலாந்து அணியும் தீவிரமாக உள்ளது. நாளை நடைபெறவுள்ள போட்டியில் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் இணைவார் என்று கூறப்பட்டுள்ளது. இதேபோல அந்த அணியின் பௌலர்கள் இஷ் சவுதி மற்றும் பிளேர் டிக்னர் ஆகியோரும் நாளைய போட்டியில் இணையவுள்ளதால் போட்டி பலமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
|
பயிற்சியாளர் நம்பிக்கை
நாளைய போட்டியில் கேன் வில்லியம்சன் இணைவார் என்று பயிற்சியாளர் ஷேன் ஜர்கென்சனும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அவர் பிட்னசுடன் உள்ளதாகவும் நாளைய தினம் இறுதியாக அவரது பிட்னசை சோதித்து அணியில் சேர்க்கப்படுவார் என்றும் அவர் கூறியுள்ளதை பிளாக் கேப்ஸ் தனது அதிகாரப்பூர்வ இணையபக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளது.
2வது போட்டியில் பேட்ஸ்மேன்கள் சொதப்பல்
ஹாமில்டனில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா 347 ரன்களை அடித்திருந்த போதிலும், பௌலர்கள் சிறப்பான பந்துவீச்சை அளிக்க தவறியதால், 11 பந்துகள் மீதமிருந்த சூழலில், கடினமான அந்த இலக்கை நியூசிலாந்து அடைந்து வெற்றி பெற்றது. இதேபோல இரண்டாவது போட்டியில் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்ததால் வெற்றி சாத்தியப்படவில்லை.
3வது போட்டிக்கு தயாராகும் இந்தியா
இந்நிலையில் இந்த 2 போட்டிகளில் விட்டதை பிடிக்க, 3வது போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற இந்தியா தீவிரம் காட்டிவருகிறது. இதேபோல வரும் 21ம் தேதி துவங்கவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரையும் கைப்பற்ற முனைப்புடன் பயிற்சி மேற்கொண்டு வருகிறது. டெஸ்ட் தொடரை வெல்லும் பட்சத்தில் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அதிக புள்ளிகளை பெற்று முன்னணியில் உள்ள இந்தியா மேலும் அதிக புள்ளிகளை பெறும்.