முதல் டெஸ்ட் :4ம் நாள் இறுதியில் ஆஸ்திரேலியா 290/5; இந்தியாவை விட 363 ரன்கள் முன்னிலை!!
அடிலெய்டு: இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் 4ம் நாள் ஆட்ட இறுதியில் ஆஸ்திரேலியா தனது 2வது இன்னிங்சில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 290 ரன்களை எடுத்துள்ளது. இந்திய அணியைவிட 363 ரன்கள் முன்னிலையில் உள்ளது ஆஸ்திரேலியா.
இந்திய ஆஸ்ரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டு நகரில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 3வது நாளான நேற்று காலை தனது முந்தைய நாள் ஸ்கோரான 517/7-க்கு டிக்ளேர் செய்தது.
இதனால் காலை இந்தியா நேற்று தனது முதல் இன்னிங்சை ஆட தொடங்கியது. நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 369 ரன்கள் குவித்தது.

கோஹ்லி 115 ரன்கள்
இந்திய அணியில் கேப்டன் கோஹ்லி அதிகபட்சமாக 115 ரன்கள் எடுத்தார். இந்நிலையில் இன்று நான்காவது நாள் ஆட்டம் தொடர்ந்தது.

33 ரன்களுடன் ரோகித்
நேற்றைய ஆட்ட நேர முடிவில் அவுட்டாகாமல் களத்தில் 33 ரன்களுடன் இருந்த ரோகித், 11 ரன்களுடன் இருந்த சாகா ஜோடி இன்று மீண்டும் தங்களது ஆட்டத்தை தொடர்ந்து ஆடியது.

சிங்கமாக சீறிய "லயன்" பந்து வீச்சு
இன்று ஆட்டம் தொடங்கியது முதல் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு அபாரமாக இருந்தது. சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயனின் பந்துவீச்சு அபாரமாக இருந்தது. லயன் வீசிய ஓவரில் இன்று முதல் விக்கெட்டாக ரோகித் 43 ரன்னில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

கிளீன் போல்டு ஆன கரண்
அடுத்து வந்த கரண் சர்மாவை சிடில் க்ளீன் போல்ட் ஆக்கினார். சிறிது நேரத்தில் சாகாவும் 25 ரன்னில் வெளியேறினார்.

டக் அவுட் ஆன இஷாந்த்
அடுத்து இஷாந்த் சர்மாவும் டக் அவுட்டானார். ஆனால் 9வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஷமி அதிரடியாக ஆடி 24 பந்தில் 34 ரன்கள் எடுத்து அவுட்டானார். அவரது ஸ்கோரில் ஒரு சிக்சரும் அடங்கும்.

444 ரன்களுக்கு ஆல் அவுட்
வருண் ஆரோன் 3 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். முடிவில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 444 ரன்களை எடுத்தது.

5 விக்கெட்டுகளை எடுத்த லயன்
ஆஸ்திரேலிய அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய சுழற்பந்து வீச்சாளர் லயன் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் 73 ரன்கள் முன்னிலை என்ற நிலையில் ஆஸ்திரேலியா தனது 2வது இன்னிங்சை தொடங்கியது.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஜர்சும், வார்னரும் களமிறங்கினர். உணவு இடைவேளைக்கு பின் ஆட்டம் தொடங்கியதும் ரோஜர்சின் விக்கெட்டை கரன் சர்மா வீழ்த்தினார்.

மீண்டும் சதமடித்த வார்னர்
முதல் இன்னிங்ஸில் சதமடித்த வார்னர் 2வது இன்னிங்ஸில் 102 ரன்களை குவித்தார். ஷேன் வாட்சன் 33 ரன்களுக்கும், மிட்சல் மார்ஷ் 40 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.

290 ரன்கள்
இன்றைய ஆட்டத்தின் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 290 ரன்களை எடுத்துள்ளது ஆஸ்திரேலியா. ஸ்டீவன் ஸ்மித் 52 ரன்களுடனும், பிராட் ஹாடின் 14 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

363 ரன்கள் முன்னிலை
தற்போது ஆஸ்திரேலியா இந்திய அணியை விட 363 ரன்கள் முன்னிலையில் உள்ளது.


Click it and Unblock the Notifications