டாப் ஆர்டரின் சொதப்பல்
160 ரன்கள் என்ற சவாலான இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி வழக்கம் போல டாப் ஆர்டர் சொதப்பியது. தொடக்க வீரர்கள் கே.எல்.ராகுல் 4 ரன்களுக்கும், ரோகித் சர்மா 4 ரன்களுக்கும் அடுத்தடுத்து வெளியேறினர். இதன்பின்னர் வந்த நம்பிக்கை நட்சத்திரமான சூர்யகுமார் யாதவ் 15 ரன்களை மட்டுமே எடுத்து துரதிஷ்டவசமாக வெளியேறினார். இதனால் 31 ரன்களுக்குள் 4 விக்கெட்களை இழந்து இந்தியா தடுமாறியது.
பார்ட்னர்ஷிப்
இந்திய அணி இக்கட்டான சூழலில் இருந்த போது விராட் கோலி - ஹர்திக் பாண்ட்யா ஜோடி தான் காப்பாற்றியது. இவர்கள் இருவரும் மிகவும் நிதானமாக விளையாட இந்தியாவின் ரன்ரேட் மிகவும் மெதுவாக உயர்ந்தது. இதனால் ஒருகட்டத்தில் இந்தியா அணி 11 ஓவர்களில் 54 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. இதனால் கடும் நெருக்கடி ஏற்பட்டது.
டிராவிட் ஆலோசனை
இந்நிலையில் 12வது ஓவரில் திடீர் ட்விஸ்ட் ஏற்பட்டது. 11வது ஓவர் முடிந்தவுடன் வந்த ட்ரிங்ஸ் பிரேக்கில் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டே நேரடியாக களத்திற்குள் வந்தார். பாண்ட்யா மற்றும் கோலி ஆகியோரிடையே டிராவிட் ஏதோ ஆலோசனைக்கூறினார். அவர் கூறிவிட்டு சென்ற அடுத்த ஓவரிலேயே இந்தியாவின் ஸ்கோர் மலமலவென ஏற்றம் கண்டது.
திடீர் ட்விஸ்ட்
முகமது நவாஸ் வீசிய அந்த ஓவரில் முதல் பந்திலேயே ஹர்திக் பாண்ட்யா சிக்ஸர் விளாசினார். இதன்பின்னர் 4வது பந்து மற்றும் 6வது பந்திலும் விராட் கோலி மற்றும் பாண்ட்யா ஆகியோர் மாறி மாறி சிக்ஸர்களை விளாசினார்கள். இதன் மூலம் அந்த ஒரு ஓவரில் மட்டும் 20 ரன்களை இந்திய அணி சேர்த்தது. இதன்பின்னர் தான் இந்தியாவின் ரன்வேட்டையே தொடங்கியது என்று கூறலாம்.
பாகிஸ்தானின் திட்டம்
இதுஒருபுறம் இருக்க, டிராவிட் செய்த விஷயத்தை பாகிஸ்தானும் செய்திருந்தது. பாகிஸ்தானும் டாப் ஆர்டர் சொதப்பலால் தடுமாறிய போது, ஆட்டத்தின் 11வது ஓவர் முடிந்தவுடன் பயிற்சியாளர் ஆலோசனை தந்தார். அதன்பின்னர் அக்ஷர் பட்டேல் வீசிய 12வது ஓவரில் 3 சிக்ஸர்கள் உட்பட 21 ரன்கள் பறந்தது குறிப்பிடத்தக்கது.