இந்திய பேட்டிங் மோசம்
டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. தானியா பாட்டியா மற்றும் ஸ்மிருதி மந்தனா துவக்கம் அளித்தனர். மந்தனா 34, ரோட்ரிகஸ் 26 ரன்கள் எடுத்தனர். இது மட்டுமே இந்திய அணி வீராங்கனைகளில் ஓரளவு நல்ல ஸ்கோர். மற்றவர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். இந்தியா 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 112 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்தியாவில் 3 ரன் அவுட்
இந்திய அணியில் ரோட்ரிகஸ், தீப்தி சர்மா, ராதா யாதவ் ஆகியோர் ரன் அவுட் ஆனது இந்திய அணியின் பின்னடைவுக்கு மிக முக்கிய காரணம். கடைசி 23 ரன்கள் எடுப்பதற்குள் எட்டு விக்கெட்களை இழந்து இருந்தது இந்தியா. ஒருவர் கூட பொறுப்பாக நின்று ஆடவில்லை.
இங்கிலாந்து எளிதான வெற்றி
அடுத்து இங்கிலாந்து அணி களம் இறங்கியது. 113 ரன்கள் என்ற எளிதான இலக்கை நோக்கி ஆடியது. இந்திய அணியில் தீப்தி சர்மா, ராதா யாதவ் அடுத்தடுத்து துவக்க வீராங்கனைகள் வியாட் மற்றும் பேமவுன்ட்-ஐ ஒற்றை இலக்க ரன்களில் வெளியேற்றி நம்பிக்கை அளித்தனர். எனினும், இங்கிலாந்தின் ஜோன்ஸ், சைவர் பொறுப்பாக நின்று ஆடினர். இருவரும் அரைசதம் அடித்து 17.1 ஓவர்களில் அணியை வெற்றிக் கோட்டை தாண்டச் செய்தனர். இங்கிலாந்து அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.
இந்தியாவின் சோகம் தொடர்கிறது
இந்திய மகளிர் அணி மிக மோசமான பேட்டிங்கால் மீண்டும் ஒரு முறை முக்கிய போட்டியில் தோல்வி அடைந்துள்ளது. இதற்கு முன் 50 ஓவர் உலகக்கோப்பை இறுதிப் போட்டி வரை முன்னேறிய இந்திய அணி இங்கிலாந்து அணியிடம் தோல்வி அடைந்தது. அதே போல, இப்போது டி20 உலகக்கோப்பை அரையிறுதியில் அதே இங்கிலாந்து அணியிடம் தோல்வி அடைந்துள்ளது. இந்த தோல்வியால் இந்திய மகளிர் அணியின் உலகக்கோப்பை சோகம் தொடர் கதையாக மாறியுள்ளது.