வேறு மாதிரி இருந்த இன்றைய போட்டி
ஆனால், இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் எல்லாமே வித்தியாசமாக நடந்துள்ளது. முதல் 10 ஓவர்கள் மட்டும் இந்திய பந்து வீச்சு ஓரளவுக்கு கை கொடுத்தது. ஆனால், அதன்பிறகு கியரை மாற்றிவிட்டனர் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள். அதிலும் குறிப்பாக இந்திய ஸ்பின் பவுலர்களை அவர்கள் குறி வைத்து அடித்தனர்.
ஸ்பின் பந்து வீச்சு
ஆசிய நாடுகளை தவிர்த்த பிற அணிகள் ஸ்பின்னுக்கு திணறக் கூடியவை என்பதால், இந்திய அணி இன்றைய போட்டியில் பெரிதாக நம்பியது குல்தீப் யாதவ் மற்றும் சஹல் ஆகிய இரு ஸ்பின்னர்களைத்தான். ஆனால், அவர்களைத்தான் அதிகமாக குறி வைத்து தாக்கிவிட்டனர். குல்தீப் ஓவரில் முதல் பந்திலேயே இறங்கி வந்து சிக்ஸ் அல்லது பவுண்டரி அடிப்பதையை ஜேசன் ராய் மற்றும் பேர்ஸ்டோ ஆகிய இரு ஓப்பனர்களும் வழக்கமாக வைத்திருந்தனர்.
எதனால் இப்படி
குல்தீப் யாதவ் இரு பக்கமும் பந்தை ஸ்பின் செய்ய கூடியவர். அங்குதான் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் ஒரு தந்திரம் செய்தனர். பந்தை பிட்ச் செய்ய விடாமல் இறங்கி வந்து அடித்தனர். அதில் வெற்றியும் பெற்றனர். பிட்ச் செய்தால் குல்தீப் பந்து எந்த பக்கம் செல்கிறது என்பதை கணித்து அடிக்க வேண்டும். அதில் ரன் சேகரிப்பது கஷ்டம் என்பதால், இறங்கி வந்து பந்தை ஃபுல்டாஸ் அல்லது, ஓவர் பிட்ச் பாலாக மாற்றி அடித்தனர். முதல் பந்திலேயே இப்படி செய்தால் பவுலருக்கு பதற்றம் தொற்றிக்கொண்டு அவரது வழக்கமான ஸ்டைல் பந்து வீச்சை இழந்துவிடுவார்கள். அதுதான் இன்றும் நடந்தது.
வித்தியாசம் இதுதான்
இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் ஸ்பின் பந்து வீச்சை சிறப்பாக ஆடியதால்தான், இந்திய அணி ரன்களை வாரி வழங்கிவிட்டது. அதுதான் இன்றைய போட்டியில், நடந்தது. அதுதான் பிற போட்டிகளில் இருந்து இன்றைய போட்டியை வித்தியாசமாக்கிவிட்டது. அதேபோல ஸ்பின் பந்தில் ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்டுகளை அதிகமாக ஆடினர் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள். இதுவும் பவுலர்களை குழப்பியது. இதுபோல இறங்கி வரும்போதும், ரிவர்ஸ் அடிக்கும்போதும், ரிஸ்க் அதிகம். ஆனால், திறமையான ஷாட்டுகளால் ரிஸ்க் எடுப்பதை ரஸ்க் சாப்பிடுவது போல மாற்றியிருந்தனர் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள். ஆனால் இந்திய பவுலர்கள் கடைசி நேரத்தில் மீண்டும் ஆட்டத்திற்குள் வரும் திறமை மிக்கவர்கவர்கள். எப்படி நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.