ஒரே டெஸ்டில் தோனி, பாண்டிங்கை மிஞ்சலாம், அற்புதமான வாய்ப்பு... பயன்படுத்திக்கொள்வாரா கோலி?
அகமதாபாத்: நாளை தொடங்கும் 3வது டெஸ்டில் ஆஸி.முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் மற்றும் தோனியின் சாதனையை விராட் கோலி முறியடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் நாளை அகமதாபாத்தில் உள்ள மொய்தீரா மைதானத்தில் பகலிரவு போட்டியாக நடைபெறவுள்ளது.
இதற்காக இரு அணி வீரர்களும் தயாராகி வரும் நிலையில் பேட்டிங்கில் மிகப்பெரும் சாதனையை படைக்க விராட் கோலிக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

விராட் கோலி
இங்கிலாந்துக்கு எதிரான முதல் மற்றும் 2வது டெஸ்டில் விராட் கோலி இதுவரை 2 அரை சதங்கள் அடித்துள்ளார். ஆனால், சதம் அடிக்கவில்லை. கடந்த 10 இன்னிங்ஸ்களாக கோலி சதம் அடிக்காமலேயே டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறார்.

புதிய சாதனை
அணியின் கேப்டனாக இருந்து சர்வதேசப் போட்டிகளில் அதிகமான சதங்களை அடித்தவர்கள் வரிசையில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங்கிற்கு இணையாக கோலி உள்ளார். இருவரும் தற்போது 41 சர்வதேச சதங்களுடன் உள்ளனர். இந்நிலையில் நாளை நடைபெறும் 3வது டெஸ்டில் கோலி சதமடித்தால் 42 சதங்களுடன் ரிக்கிப்பாண்டிங்கை முந்துவார்.

தோனியை மிஞ்சும் கோலி
உள்நாட்டில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் அதிகமான வெற்றிகளைப் பெற்றுக்கொடுத்த கேப்டன்களின் பட்டியலில் தலா 21 வெற்றிகளுடன் தோனியும் கோலியும் சமநிலையில் உள்ளனர். எனவே 3வது டெஸ்டில் கோலி வெற்றி பெற்றுக்கொடுத்தால் தோனியின் சாதனையை முறியடிப்பார்.

12 ரன்கள்
இங்கிலாந்துக்கு எதிராக உள்நாட்டில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் 1,000 ரன்களை எட்டுவதற்கு கோலிக்கு இன்னும் 12 ரன்களும், புஜாராவுக்கு 45 ரன்களுமே தேவை. எனவே நாளை தொடங்கும் டெஸ்ட் போட்டியில், இருவரும் அச்சாதனையை செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications