ஹைதராபாத் : 2019 ஐபிஎல் தொடரில் முன் எப்போதும் இல்லாத வகையில் வெறும் 12 புள்ளிகள் மட்டுமே பெற்ற அணி ஒன்று பிளே-ஆஃப் சுற்றில் நுழைந்துள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் வெற்றிகரமாக முடிந்துள்ளன. இந்த தொடரின், கடைசிப் போட்டி வரை எந்த அணி நான்காவதாக பிளே-ஆஃப் சுற்றில் நுழையப் போகிறது என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
கொல்கத்தா, பஞ்சாப், ஹைதராபாத் ஆகிய மூன்று அணிகள் 12 புள்ளிகளுடன் இருந்தன. இதில் பஞ்சாப் அணிக்கு நெட் ரன் ரேட் குறைவு என்பதால், பிளே-ஆஃப் வாய்ப்பு கிடைக்கவில்லை.
அடுத்து கொல்கத்தா அணி, மும்பை அணியுடன் தோல்வி அடைய, ஹைதராபாத் அணி அதிக நெட் ரன் ரேட் அடிப்படையில் பிளே-ஆஃப் சுற்றுக்கு நான்காவதாக தகுதி பெற்றது.
இந்த அணி அதிக நெட் ரன் ரேட் பெற முக்கிய காரணம், வார்னர் - பேர்ஸ்டோ ஜோடியின் அதிரடியால்,அந்த அணி பெரிய வித்தியாசத்தில் பெற்ற வெற்றிகள் தான். அவர்கள் பிளே-ஆஃப் சுற்றில் ஆடப் போவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதுவரை ஐபிஎல் தொடரில் எந்த அணியும் 12 புள்ளிகள் மட்டுமே பெற்று பிளே-சுற்றுக்குள் நுழைந்ததில்லை. இது ஒருபுறம் என்றால், முதல் மூன்று இடங்களில் இருக்கும் மும்பை, சென்னை, டெல்லி அணிகள் ஒரே மாதிரி 18 புள்ளிகள் பெற்றுள்ளன. இது எந்த அணியும், லீக் சுற்றில் தனி ஆவர்த்தனம் செய்யவில்லை என்பதற்கு சான்றாக அமைந்துள்ளது.
கடைசி இரண்டு இடங்களில் ராஜஸ்தான், பெங்களூர் அணிகள் 11 புள்ளிகள் பெற்றுள்ளன. முதல் இடத்தில் இருக்கும் அணிக்கும், புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் அணிக்குமான வித்தியாசம் 7 புள்ளிகள் மட்டுமே. நான்காவது இடத்தில் இருக்கும் ஹைதராபாத் அணிக்கும், கடைசி இடத்தில் இருக்கும் பெங்களூர் அணிக்குமான வித்தியாசம் வெறும் 1 புள்ளி மட்டுமே!