கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து துவங்கி உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 1,30,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுள்ளனர். 5,0௦௦க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்த வைரஸ் மிக வேகமாக பரவி வருவதால் மக்கள் வீட்டுக்குள் முடங்கும் சூழ்நிலை உருவாகி வருகிறது.
விளையாட்டுப் போட்டிகள் பாதிப்பு
மக்கள் கூட்டமாக கூட பல நாடுகளும் தடை விதித்து வருகின்றன. அதனால், விளையாட்டுப் போட்டிகள் பல நாடுகளில் ரத்து செய்யப்பட்டுள்ளன. கிரிக்கெட் போட்டிகளுக்கும் இதே நிலை தான். ஆஸ்திரேலியா - நியூசிலாந்து தொடர், இங்கிலாந்து - இலங்கை தொடர் ஆகியவை தள்ளி வைக்கப்பட்டுள்ளன.
ஐபிஎல் நிலை
இந்த நிலையில், இந்தியாவின் பிரம்மாண்ட கிரிக்கெட் தொடரான ஐபிஎல் திட்டமிட்டபடி நடக்குமா? என்ற சந்தேகம் இருந்தது. பார்வையாளர்கள் இல்லாத காலி மைதானத்தில் போட்டி நடைபெறும் என சிலர் கூறி வந்தனர்.
கங்குலி தள்ளி வைப்பு
இந்த நிலையில், பிசிசிஐ தலைவர் கங்குலி ஐபிஎல் தொடரை தள்ளி வைக்கும் முடிவை எடுத்தார். கொரானா வைரஸ் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் விசா பிரச்சனை ஆகியவற்றின் காரணமாக மார்ச் 29 துவங்க இருந்த தொடரை ஏப்ரல் 15 வரை தள்ளி வைத்துள்ளார்.
மீண்டும் நடக்குமா?
ஐபிஎல் தொடர் ஏப்ரல் 15க்கும் பின்னும் நடக்குமா என்பது தெரியவில்லை. ஒருவேளை ஐபிஎல் தொடர் இந்த ஆண்டு தடைபட்டால் மிகப் பெரிய அளவில் பொருளாதார இழப்பு ஏற்படும். போட்டி அட்டவணை மாற்றி அமைக்கப்பட்டு குறைவான போட்டிகள் நடந்தாலும் பெரிய அளவில் பாதிப்பு இருக்கும்.
3000 கோடி நஷ்டம்
ஐபிஎல் தொடரை ரத்து செய்தால் மொத்தமாக 3000 கோடி முதல் 3500 கோடி வரை நஷ்டம் ஏற்படும். ஒவ்வொரு அணிக்கும் ஒளிபரப்பு உரிமைக்காக பிசிசிஐ-யிடம் இருந்து கிடைக்கும் சுமார் 100+ கோடிகள் கிடைக்காமலேயே போகும்.
டிக்கெட் விற்பனை
மேலும், டிக்கெட் விற்பனை மூலம் ஆண்டுக்கு 300 கோடி வரை வருவாய் கிடைக்கிறது. அது மட்டுமின்றி, ரசிகர்களுக்கான சிறப்பு பூங்காக்களில் 50 கோடி வரை கிடைக்கும். இவை அனைத்துமே ஐபிஎல் அணிகளுக்கு கிடைக்கும் வருவாய் ஆகும். இதுவும் கிடைக்காமல் போகும்.
விளம்பர வருவாய்
ஐபிஎல் தொடரை ஒளிபரப்பும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் 3000 கோடி அளவுக்கு விளம்பரங்கள் மூலம் பெறும். ஐபிஎல் போட்டிகள் ரத்து செய்யப்பட்டாலோ, சிறிய தொடராக மாற்றி அமைக்கப்பட்டாலோ, கடுமையாக பாதிப்படையும்.
600 பேருக்கு வேலைவாய்ப்பு
அதே போல, ஐபிஎல் தொடர் சமயத்தில் மட்டும் எட்டு அணிகளில் சுமார் 600 பேர் வேலை வாய்ப்பை பெறுவார்கள். அவர்கள் அனைவருக்கும் தொடர் ரத்து செய்யப்பட்டால் வேலை கிடைக்காமல் போகும். மேலும், ஹோட்டல், பயணம் ஆகியவற்றுக்கு மட்டும் 50 கோடி வரை செலவு செய்யும். அந்த துறைக்கும் வருவாய் இழப்பு ஏற்படும்.
ஐபிஎல் நடக்குமா?
அதனால் தான் பிசிசிஐ ஐபிஎல் தொடரை ரத்து செய்யாமல், தற்காலிகமாக தள்ளி வைத்துள்ளது. ஆனாலும், தற்போது கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் உலகம் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், ஐபிஎல் தொடர் நடக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.