கொரோனா வைரஸ் பாதிப்பு
2020ஐ ஆட்டிப் படைத்து வருகிறது கொரோனா. இந்த ஆண்டின் துவக்கத்தில் சீனாவில் கொரோனா வைரஸ் பரவத் துவங்கியது. அங்கே இருந்து சுமார் 120க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அந்த கொடிய வைரஸ் பரவி உள்ளது. சுமார் 12,0,000 மக்கள் பாதிக்கப்பட்டும், சுமார் 4,000 பேர் பலியாகியும் உள்ளனர்.
இந்தியா முன்னெச்சரிக்கை
120 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் இந்த வைரஸ் பரவத் துவங்கி உள்ளது. இந்திய அரசு அதனால் கடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் துவங்கி உள்ளது. மக்கள் அதிகமாக பொது வெளியில் கூட்டமாக இருக்க வேண்டாம் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஐபிஎல் தொடர் நிலை
அதனால், சச்சின், லாரா, சேவாக் உள்ளிட்ட ஜாம்பவான் வீரர்கள் பங்கேற்று ஆடி வரும் டி20 தொடர் ரசிகர்கள் இல்லாத மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த நிலையில், 2020 ஐபிஎல் தொடர் திட்டமிட்டபடி நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
டிக்கெட் விற்க தடை
இதனிடையே கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநில அரசுகள் ஐபிஎல் தொடர் நடத்த அனுமதிக்க முடியாது என குரல் எழுப்பி உள்ளனர். மகாராஷ்டிரா அரசு ஒரு படி மேலே போய், மும்பையில் நடைபெற உள்ள ஐபிஎல் தொடரின் முதல் போட்டியான மும்பை இந்தியன்ஸ் - சிஎஸ்கே போட்டிக்கு டிக்கெட் விற்க தடை விதித்துள்ளதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது.
மூடப்பட்ட மைதானம்
அதிகரித்து வரும் எதிர்ப்பு மற்றும் ரசிகர்களின் உடல்நலனை கருத்தில் கொண்டு பிசிசிஐ ஐபிஎல் போட்டிகளை மூடப்பட்ட காலி மைதானத்தில் நடத்தும் என பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால், அதற்கும் ஒரு சிக்கல் எழுந்துள்ளது.
விசா விதிகள்
ஆம், இந்திய அரசு புதிய விசா விதிமுறைகளை அமல்படுத்தி உள்ளது. அதன்படி, ஐநா, வெளிநாட்டு உயர்மட்ட அதிகாரிகள், பணியாளர் விசா உள்ளிட்ட சில விசா வகைகளை தவிர்த்து, மற்ற அனைத்து விசாக்களையும் மார்ச் 13 முதல் ஏப்ரல் 15 வரை ரத்து செய்துள்ளது இந்திய அரசு.
கண்காணிப்பு
மேலும், இந்தியாவுக்கு வரும் அனைத்து பயணிகளும், இந்தியர்கள் உட்பட, விமான நிலையத்தில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். மேலும், அவர்கள் 14 நாட்கள் வரை தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படவும் வாய்ப்பு உள்ளது.
60 வெளிநாட்டு வீரர்கள்
இந்த விசா விதிகளால் ஐபிஎல் தொடரில் பங்கேற்க உள்ள சுமார் 60 வீரர்கள் நிலை கேள்விக் குறி ஆகி உள்ளது. அவர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்க ஏப்ரல் 15 வரை விசா கிடைக்காது என பிசிசிஐ வட்டாரம் கூறி உள்ளது.
பிசினஸ் விசா, பணியாட்கள் விசா
எனினும், பணியாட்கள் விசாவுக்கு அரசு அனுமதி அளிக்கும் என்பதால் அந்த வெளிநாட்டு வீரர்களுக்கு விசா கிடைக்கும் என ஒரு சிலர் கருத்து கூறி உள்ளனர். ஆனால், ஐபிஎல் வீரர்கள் பிஸினஸ் விசாவில் தான் இந்தியா வர வேண்டும். எனவே, விசா கிடைக்காது என சிலர் கூறி உள்ளனர்.
குழப்பத்தில் பிசிசிஐ
மூடப்பட்ட மைதானத்தில் போட்டி நடத்தினாலும், வெளிநாட்டு வீரர்கள் இல்லாவிட்டால் ரசிகர்களை அது எந்த அளவுக்கு ஈர்க்கும் என்ற சந்தேகத்தில் உள்ளது பிசிசிஐ. ஐபிஎல் தொடரை தள்ளி வைக்கவும் வாய்ப்பு இல்லாததால் கடும் குழப்பத்தில் உள்ளது.