கிரிக்கெட் போட்டிகள் தடை
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் 13ஆம் தேதியில் இருந்து கிரிக்கெட் போட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பிரம்மாண்ட டி20 தொடரான ஐபிஎல் தொடரும் தள்ளி வைக்கப்பட்டது, அக்டோபர் மாதம் நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பையும் சந்தேகத்தில் உள்ளது.
கடும் நஷ்டம்
அனைத்து கிரிக்கெட் நாடுகளும் கிரிக்கெட் போட்டிகள் நடக்காததால் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளன. சில நாடுகளின் கிரிக்கெட் அமைப்புகள் கடும் சிக்கலில் ஆழ்ந்துள்ளன. பிசிசிஐ தவிர அனைத்து அணிகளும் வீரர்களுக்கு சம்பளம் வழங்க திணறி வருகிறது.
போட்டிகள் அவசியம்
பிசிசிஐக்கு ஐபிஎல் மூலமாக கிடைக்க வேண்டிய 4,000 கோடி வருவாய் கிடைக்காமல் போகும் என்பதால் இந்திய அணிக்கும் எதிர்காலத்தில் சிக்கல் எழ வாய்ப்புள்ளது. எனவே, விரைவில் கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்க வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.
அவசர பயிற்சி ஏன்?
அதனால், இந்திய வீரர்களுக்கு அவர்கள் வீட்டிலேயே பயிற்சி அளிக்கத் துவக்கி உள்ளது பிசிசிஐ. இதை இரண்டு மாத கால திட்டமாக செயல்படுத்தி உள்ளது. இந்த அவசர பயிற்சி ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், இந்தியா விரைவில் பங்கேற்க உள்ள கிரிக்கெட் தொடர்கள் பற்றிய தகவல்கள் பிசிசிஐ வட்டாரத்தில் இருந்து கசிந்து வருகிறது.
ஆஸ்திரேலியா நிதி சிக்கல்
நிதி சிக்கலில் சிக்கி உள்ள ஆஸ்திரேலியா, டி20 உலகக்கோப்பை தங்கள் நாட்டில் நடக்காமல் போனாலும் இந்தியா உடனான டெஸ்ட் தொடரை நடத்தி விட வேண்டும் என ஆர்வமாக உள்ளது. அதன் மூலம் சுமார் 2,000 கோடி ரூபாய் வரை வருவாய் கிடைக்கும்.
முந்திய ஆஸ்திரேலியா
அதனால், ஆஸ்திரேலியா, பிசிசிஐயிடம் முந்திக் கொண்டு ஒப்புதல் பெற்று விட்டதாக கூறப்படுகிறது. இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் மற்றும் ஒருநாள் தொடர் வரும் நவம்பரில் ஆஸ்திரேலிய மண்ணில் நடக்க உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு ஆஸ்திரேலியாவில் இப்போது உள்ள நிலையிலேயே தொடர்ந்தால் இந்தியா அங்கே செல்வது உறுதி என கூறப்படுகிறது.
இலங்கை தொடர்
அடுத்து இலங்கை அணியுடன் இந்தியா வரும் ஜூன் இறுதி மற்றும் ஜூலை மாதத்தில் மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் பங்கேற்க ஒப்புதல் கூறி இருந்தது. ஆனால், தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கும் நிலையில் இந்திய அணி இலங்கை செல்லுமா? என்ற சந்தேகம் உள்ளது.
இலங்கை நிதி சிக்கல்
இலங்கை அணி தற்போது கடும் நிதி சிக்கலில் உள்ளது. அவர்களின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை கூட நல்ல தொகை கொடுத்து வாங்க ஆள் இல்லை. எனவே, ஐபிஎல் அல்லது இந்திய அணி தொடரை தங்கள் நாட்டில் நடத்தினால் தப்பிக்கலாம் என நினைக்கிறது இலங்கை கிரிக்கெட் அமைப்பு.
பிசிசிஐ பதில் வேண்டும்
ஐபிஎல் தொடர் இலங்கையில் நடக்க வாய்ப்பில்லை என கூறப்படும் நிலையில், இருதரப்பு கிரிக்கெட் தொடரை நடத்த தாங்கள் தயாராக இருப்பதாக இலங்கை கிரிக்கெட் அமைப்பு பிசிசிஐக்கு தெரிவித்துள்ளது. பிசிசிஐயின் பதிலுக்காக காத்துக் கொண்டுள்ளனர்.
பிசிசிஐ முடிவு இதுவா?
இலங்கை தொடருக்கு பிசிசிஐ சம்மதம் கூறுமா? மத்திய அரசு ஒப்புதல் அளித்தால் இந்திய அணி இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொள்ள தயாராக இருப்பதாக பிசிசிஐ வட்டாரம் கூறி உள்ளது. அதே சமயம், கொரோனா வைரஸ் தொடர்பான முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளையும் கருத்தில் கொண்டு முடிவு செய்யப்படும் எனவும், அந்த தொடருக்காகவே இந்திய அணி இப்போது பயிற்சியில் ஈடுபட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.