என்ன காரணம்
கடந்த 2022ம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது முதுகில் பாதிப்படைந்த பும்ரா, மீண்டும் செப்டம்பரில் ஆஸ்திரேலிய அணியுடன் விளையாட வந்தார். ஆனால் அப்போது காயத்தின் தன்மை அதிகரித்ததால் மீண்டும் ஓய்வுக்கு சென்றார். அப்போது இருந்து ஓய்வில் இருந்து வரும் பும்ரா, இலங்கை தொடரில் கம்பேக் கொடுப்பார் என பிசிசிஐ கூறியது. ஆனால் அவர் இன்னும் முழு உடற்தகுதி பெறவில்லை எனக்கூறி வெளியேற்றியுள்ளனர்.
புதிய உடல்நிலை அப்டேட்
இந்நிலையில் இன்னும் 3 மாதங்களுக்கு அவர் வரமாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை தொடர் முடிந்தவுடன் நியூசிலாந்துடன் 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் உள்ளன. அதன்பின் ஆஸ்திரேலியாவுடன் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரும் நடைபெறவிருக்கிறது. இது தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி சுற்றுக்கு செல்வதற்கான கடைசிப்போட்டி ஆகும். இவை அனைத்திலும் பும்ரா விளையாடமாட்டார் எனக் கூறப்படுகிறது.
மீண்டும் அதே தவறு
ஏற்கனவே ஆசிய கோப்பைக்காக அவரை அவசரப்படுத்தி அணிக்குள் கொண்டு வந்ததால் காயம் பெரிதானது. எனவே மீண்டும் அதே தவறை செய்துவிடக்கூடாது என்பதற்காக பும்ராவுக்கு ஓய்வு தந்துள்ளனர். எனினும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்காவது தயாராக முயற்சி செய்யுங்கள் என தேர்வுக்குழுவிடம் இருந்து அறிவுரை கூறப்பட்டுள்ளது.
ரசிகர்களின் அதிருப்தி
மார்ச் மாதத்தின் இறுதியில் அல்லது ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் ஐபிஎல் 2023 தொடர் தொடங்கும். இந்த சமயங்களில் பும்ரா தயாராகிவிடுவார். இதனை அறிந்த ரசிகர்கள் ஐபிஎல் போன்ற காசு குவியும் தொடர்களில் மட்டும் வந்துவிடுவது எப்படி எனக்கூறி விமர்சனங்களை அள்ளி வீச தொடங்கிவிட்டனர்.