இந்திய அணியில் எப்பதான் இந்த பிரச்னை முடியுமோ..? கபில் தேவும் கருத்து சொல்லிட்டாரே? என்ன பண்றது
மும்பை: உலக கோப்பை தொடரின் போது, சூழலுக்கு ஏற்றவாறு வீரர்களை இறக்குவதே சிறந்தது என்று முன்னாள் கேப்டன் கபில் தேவ் கருத்து தெரிவித்துள்ளார்.
உலக கோப்பை நெருங்கி வருகிறது. ஆனால், அணியில் 4ம் இடத்துக்கு யாரை களம் இறக்குவது என்ற பஞ்சாயத்து மட்டும் முடிந்தபாடில்லை. அவரை போடலாம்... இவர் சரியாக இருப்பார் என்று ஆளாளுக்கு கருத்து கூறி வருகின்றனர். யாரை இறக்கலாம் என்பதற்குள் உலக கோப்பையே முடிந்து விடும் போல தெரிகிறது.
ரகானே, ஷ்ரேயாஸ் ஐயர், ரெய்னா, மனீஷ் பாண்டே என பலரை அந்த வரிசையில் பரிசோதித்த பிறகு, ராயுடு உறுதி செய்யப்பட்டார். ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் ராயுடு சொதப்ப... மறுபடியும் ஆரம்பித்தது பிரச்சனை.

அதிரடி நீக்கம்
இதையடுத்து, ராயுடு இந்திய அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். உலக கோப்பைக்கு முந்தைய கடைசி தொடரில் ராயுடு அணியிலிருந்து நீக்கப்பட்டது, அந்த இடத்திற்கு இந்திய அணி நிர்வாகம் வேறு வீரரை இறக்குவது என்பதை உறுதி செய்தது.

பெயர்கள் பரிந்துரைப்பு
அதே நேரத்தில் தமிழகத்தின் விஜய் சங்கர் சரியாக இருப்பார் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் பல முன்னாள் ஜாம்பவான்களும் பலரின் பெயர்களை பரிந்துரைத்துள்ளனர். ரிஷப் பண்ட்டின் பெயரை பாண்டிங்கும், ராயுடுவின் பெயரை ஹைடனும், விஜய் சங்கரின் பெயரை சிலரும் புஜாராவின் பெயரை கங்குலியும் பரிந்துரைத்துள்ளனர்.

கோலி வருவார்
சூழலுக்கு ஏற்றவாறு விராட் கோலியை 4ம் இடத்தில் இறக்கலாம் என்ற திட்டம் கூட உள்ளது. ஆனாலும், 4ம் வரிசை குறித்த விவாதங்கள் இன்னும் முடிந்த பாடில்லை.

கபில்தேவ் கருத்து
இந்நிலையில், இது குறித்து முன்னாள் கேப்டன் கபில் தேவ் கருத்து கூறியிருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது: 4ம் வரிசை குறித்த விவாதங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

அனைவரும் சிறந்த வீரர்கள்
அந்த வரிசை இவருக்குத்தான் என்று ஒதுக்குவதை விட சூழலுக்கு ஏற்றவாறு எந்த வீரரையும் எந்த வரிசையிலும் இறக்கலாம். அனைவருமே சிறந்த வீரர்கள் தான். எனவே ஒவ்வொரு வீரருக்கும் ஒரு இடத்தை ஒதுக்குவதற்கு பதில் அப்போது நிலவும் சூழலுக்கு ஏற்ப வீரர்களை களம் இறக்கலாம் என்று கருத்து தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications