
நன்கொடை கிரிக்கெட் போட்டி
ஆஸ்திரேலியாவில் கடந்த சில வாரங்களில் பரவிய காட்டுத்தீக்கு பல லட்சம் ஹெக்டேர் அளவிலான காடுகள் எரிந்து சாம்பலாகின. மேலும் 33 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த காட்டுத்தீக்கு சர்வதேச அளவில் பலர் நன்கொடை அளித்துவரும் நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மெல்போர்னில் நன்கொடை கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

10 மில்லியன் டாலர் வசூல்
ரிக்கி பாண்டிங் மற்றும் ஆடம் கில்கிறிஸ்ட் தலைமையில் 10 ஓவர்களுக்கு அணிகள் மோதிய நிலையில், ரிக்கி பாண்டிங் தலைமையிலான அணி ஒரு ரன் வித்தியாசத்தில் போட்டியில் வெற்றி கொண்டது. ரிக்கி பாண்டிங் தலைமையிலான அணிக்குத்தான் சச்சின் டெண்டுல்கர் பயிற்சியாளராக பொறுப்பேற்று பயிற்சி அளித்திருந்தார். இந்தப் போட்டியின் மூலம் ஆஸ்திரேலிய காட்டுத்தீக்கு நிவாரணமாக 10 மில்லியன் டாலர்கள் வசூலிக்கப்பட்டுள்ளது.
View this post on InstagramA post shared by Sachin Tendulkar (@sachintendulkar) on
இன்ஸ்டாகிராமில் புகைப்படம்
இதனிடையே, கிரிக்கெட் போட்டி நிறைவுற்றவுடன் அங்கு சில தினங்கள் விடுமுறையை கழித்த சச்சின் டெண்டுல்கர், சௌத்பேங்க் பகுதியில் தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். வெயிலில் மூழ்கி திளைப்பதாக அவர் தனது புகைப்படத்திற்கு கேப்ஷனும் சேர்த்துள்ளார்.

வம்பிழுத்த கங்குலி
இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் ஏராளமான லைக்குகளையும் கமெண்ட்டுகளையும் குவித்துள்ளனர். இந்நிலையில் பிசிசிஐ தலைவரும் சச்சினின் சக ஆட்டக்காரருமான சவுரவ் கங்குலி, அவரை வம்பிழுக்கும் வகையில், சிலருக்கு அதிர்ஷ்டம் எப்போதுமே உச்சத்தில் இருக்கும் என்றும் விடுமுறையை சிறப்பாக கழிக்குமாறும் தெரிவித்துள்ளார். அவர் தனது கமெண்ட்டை இந்தியில் பதிவிட்டுள்ளார்.

"எந்த பகுதியை கூறுகிறீர்கள்?"
கங்குலியின் இந்த கலாய்ப்பில் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங்கும் கலந்து கொண்டார். எந்த பகுதியை அவர் குறிப்பிட்டு சொல்கிறார் என்று அவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த சச்சின் டெண்டுல்கர், இது மிகவும் பயனுள்ள விடுமுறை என்றும் காட்டுத்தீக்கு 10 மில்லியன் டாலர் வசூலாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications