
சென்னையில் 2வது டெஸ்ட்
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் சென்னையில் நடந்து முடிந்துள்ளது. இதில் 227 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. இந்நிலையில் வரும் 13ம் தேதி இரு அணிகளுக்கிடையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி துவங்கி நடைபெறவுள்ளது.

பிட்னசை நிரூபித்த கேஎல் ராகுல்
டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான துவக்கத்தை அளித்துவரும் கேஎல் ராகுல் கடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரின் இடையில் இடது மணிக்கட்டில் ஏற்பட்ட காயம் காரணமாக இடையிலேயே நாடு திரும்பினார். இந்நிலையில் தற்போது அவர் என்சிஏவில் தனது பிட்னசை கடந்த வாரத்தில் நிரூபித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிராக 199 ரன்கள்
கடந்த 2016ல் சென்னையில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் தனது அதிகபட்ச ரன்களான 199ஐ கேஎல் ராகுல் எடுத்துள்ளார். இந்நிலையில் அவரை தற்போது இரண்டாது போட்டியிலேயே தேர்ந்தெடுக்க ரசிகர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆயினும் அவர் அகமதாபாத்தில் நடைபெறவுள்ள 3வது போட்டிக்காக தேர்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராகுலை சேர்க்க ரசிகர்கள் விருப்பம்
கடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா 6 மற்றும் 12 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டானார். இந்நிலையில் தனது பிட்னசை நிரூபித்துள்ள கேஎல் ராகுல் அணியில் சேர்க்கப்பட வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது. இங்கிலாந்து பௌலர்களின் ஸ்பின்களை எதிர்கொள்ள அவர் சிறப்பானவர் என்றும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications