
பாண்ட்யாவிடம் கைவரிசை
பிரபலங்களின் ட்விட்டர் கணக்கில் இருந்து பதிவுகள் எப்போதாவது வரும். ஆனால் இன்று திடீரென க்ருணால் பாண்ட்யாவின் பக்கத்தில் இருந்து மட்டும் மோசமான பதிவுகள் அடுத்தடுத்து போடப்பட்டன. ரசிகர்கள் மிகவும் தகாத வார்த்தைகளில் திட்டுவது போன்றும் பதிவுகள் இடம்பெற்றன. இது அனைவருக்கும் ஆதிர்ச்சியை கொடுத்தது. அதன்பின்னர் தான் அவரின் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

மோசமான ட்வீட்கள்
2 மணி நேரத்தில் மொத்தம் 9 ட்வீட்களை போட்ட அந்த மர்ம நபர், க்ருணால் பாண்ட்யாவின் ட்விட்டர் கணக்கு விற்கப்படுவதாகவும், பிட் காய்ன்ஸ் கொடுக்கும் நபர்களுக்கு விற்கப்படும் எனவும் பதிவிடப்பட்டுள்ளது. நேரம் போக போக மோசமான ட்வீட்கள் வருவதால் விரைந்து தனது கணக்கை மீட்க க்ருணால் பாண்டியா முயற்சித்து வருகிறார்.

காத்திருப்பு
கடந்த ஐபிஎல் தொடரில் சற்று மோசமாக விளையாடிய க்ருணால் பாண்ட்யா, இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வருகிறார். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஏமாற்றமே மிஞ்சியது. இதுவரை அவர் சர்வதேச அளவில் 4 ஒருநாள் போட்டிகளிலும் 130 ரன்களும், 19 டி20 போட்டிகளில் 124 ரன்களும் அடித்துள்ளார். மொத்தமாக 17 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

ஐபிஎல் ஏலம்
வரவிருக்கும் ஐபிஎல் தொடரில் இவர் அகமதாபாத் அணியால் ஏலம் எடுக்கப்படுவார் எனத் தெரிகிறது. ஏனென்றால் ஹர்திக் பாண்ட்யா அகமதாபாத் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு உறுதுணையாக க்ருணாலும் அணியில் இணைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











