சிறந்த பயிற்சியாளர்
மைக் ஹெஸ்ஸன் நியூசிலாந்து அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஆவார். அவர் காலத்தில் தான் நியூசிலாந்து அணி உலகக்கோப்பை இறுதிப் போட்டி வரை முன்னேறியது. மேலும், கேப்டனுடன் மைக் ஹெஸ்ஸன் நடந்து கொள்ளும் விதமும் பாராட்டப்பட்டது.
ஐபிஎல் பயிற்சியாளர்
ஒரு கட்டத்தில் நியூசிலாந்து அணியில் இருந்து விலகிய மைக் ஹெஸ்ஸன், ஐபிஎல் அணியான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு பயிற்சியாளராக இருந்தார். கடந்த சீசனில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் பெரிய அளவில் சோபிக்கவில்லை.
இந்திய அணியின் கோச்
இந்த நிலையில் உலகக்கோப்பை தொடரை அடுத்து இந்திய அணிக்கு அடுத்த பயிற்சியாளரை தேர்வு செய்யும் பணிகள் தொடங்கி உள்ளன. இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு பலரும் போட்டி போட்டு விண்ணப்பித்து வருகின்றனர்.
பரவும் செய்தி
அதற்கு மைக் ஹெஸ்ஸனும் போட்டி போடுகிறார். அதற்காகத் தான் ஐபிஎல் அணி பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால், திடீரென இவர் தான் அடுத்த இந்திய பயிற்சியாளர் என்ற செய்தி பரவி வருகிறது.
ஏன் ராஜினாமா?
ஆனால், மைக் ஹெஸ்ஸன் வேறு சில திட்டங்களை மனதில் வைத்து தான் ராஜினாமா செய்து இருக்கிறார். ஒரு வேளை இந்திய அணியின் பயிற்சியாளர் பதவி கிடைக்காமல் போய் விட்டால் என்ன செய்வார்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
மூணு மாங்காய்
எப்படியும் வேறு ஒரு தேசிய அணிக்கு பயிற்சியாளராக மாறி விடுவார் என்ற தகவல் கிடைத்துள்ளது. அதாவது ஒரே நேரத்தில் மூன்று மாங்காய்களுக்கு குறி வைத்துள்ளார் மைக் ஹெஸ்ஸன். இந்தியா தவிர பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகளுக்கும் பயிற்சியாளராக முயற்சித்து வருவதாக தெரிய வந்துள்ளது.
வங்கதேச பயிற்சியாளர்?
இந்திய அணிக்கு மீண்டும் ரவி சாஸ்திரி பயிற்சியாளராக தொடரவே வாய்ப்பு அதிகம் என கூறப்படுகிறது. பாகிஸ்தான் அணியிலும் அவர்கள் நாட்டை சேர்ந்த முன்னாள் வீரர்கள் தான் நியமிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது. ஆனால், வங்கதேசம் சிறந்த வெளிநாட்டு பயிற்சியாளரை தேடி வருகிறது. அங்கே நிச்சயம் பயிற்சியாளர் பதவியை மைக் ஹெஸ்ஸன் பிடித்து விடுவார் என்கிறார்கள்.