குல்தீப் நீக்கம் தற்காலிகம்
நீக்கப்பட்ட இருவரில் குல்தீப் யாதவ் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 யில் சிறப்பாக பந்து வீசினாலும், இவர் பங்கேற்ற ஒரு டெஸ்ட் போட்டியில் சுழல் பந்துவீச்சு சுத்தமாக எடுபடவில்லை. அஸ்வினும் கூட முதல் போட்டியில் மட்டுமே அதிக விக்கெட்கள் எடுத்தார். இங்கிலாந்தில் சுழலுக்கு அதிக வேலை இல்லாத காரணத்தால் நீக்கப்பட்டு இருக்கிறார். அடுத்து வரும் டெஸ்ட் தொடர்களில் இவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.
ஏன் முரளி விஜய் நீக்கப்பட்டார்
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முரளி விஜய் நான்கு இன்னிங்ஸ்களில் எடுத்த ரன்கள் 20, 6, 0, 0. அதிலும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் எந்த ரன்களும் எடுக்காமல் அவர் ஆட்டமிழந்த காரணத்தால் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சேர்க்கப்படவில்லை. அந்த போட்டியில் தவான், ராகுல் துவக்கக் கூட்டணி ஓரளவு ரன்கள் சேர்த்து, இந்திய அணிக்கு நல்ல துவக்கம் அளித்தனர். இதனால், முரளி விஜய் தன் முக்கியத்துவத்தை இழந்தார். அதையடுத்து, இப்போது இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க, தன் இடத்தை இழந்துள்ளார்.
முரளி விஜய் அவ்வளவுதானா?
முரளி விஜய் இந்திய அணியில் டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டுமே எடுக்கப்பட்டு வந்தார். டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் கடைசியாக இந்திய அணிக்காக அவர் ஆடியது 2015-இல் தான். 2010-இல் இருந்து 2015 வரை வெறும் 17 ஒருநாள் போட்டிகளிலும், 9 டி20 போட்டிகளிலும் தான் ஆடியிருக்கிறார்.
ஆப்கனுக்கு எதிராக சதமடித்தார்
டெஸ்ட் பேட்ஸ்மேன் என்ற அடையாளத்தோடு வலம் வந்த விஜய், இதுவரை 59 டெஸ்ட் போட்டிகளில் 3933 ரன்கள் எடுத்திருக்கிறார். டெஸ்டில் 39.33 ஆவரேஜ் வைத்துள்ள அவர், 12 சதங்கள் அடித்து இருக்கிறார். கடைசியாக இரண்டு மாதங்கள் முன்பு, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக சதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியில் வாய்ப்பு கடினம்
தற்போது 34 நான்கு வயதாகும் முரளி விஜய்க்கு இனி இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு எட்டாக்கனிதான். தவான், ராகுல், ப்ரித்வி ஷா ஆகியோர் தற்போது இந்திய டெஸ்ட் அணியின் துவக்க வீரர்கள் பட்டியலில் இருக்கிறார்கள். மேலும் பல இளம் வீரர்கள் முதல் தர போட்டிகளில் நன்றாக விளையாடியும் அணியில் இடம் கிடைக்காமல் காத்திருக்கிறார்கள். எனவே, முரளி விஜயை மறுபடியும் இந்திய அணியில் பார்ப்பது சாத்தியமில்லாமல் போகலாம்